(Reading time: 1 - 2 minutes)

கவிதை - என் காதல் - கிருஷ்ண பச்சமுத்து

இதோ! லேசாய் பாரம்!

என் நெஞ்சில்!

 

கடக்கும் நொடிகளில்

கடத்திச் செல்கிறாளே!

 

பாரம் கூட கூட

மேலெழும்புகிறேனே!

புவியென்னை

மறந்ததோ?

எடைக்கல்

இல்லாமல்,

எடையளந்து

நினைவுகளின்

பாரம் சொல்கிறேன்.

 

பற்பசையின்

பலனை

அவளைப்

பார்த்ததுமுதல்

உலகிற்குக்காட்டி

விளம்பரம் 

செய்கிறேன்!

 

கண்களை

நிலைநிறுத்த

அவள் விழிகளை

தேடுகிறேன்!

அனுமதிக்க

மறுக்கிறாள்!

அனுமதித்தால்

ஆட்கொள்வேனென

அவளறியாமல்

இல்லை!

 

சூழ்நிலை அவளை

என்னிடம் பேசவைத்தால்,

பார்க்கிறாள்!

விழியசைத்து பேசுகிறாள்!

எனக்கோ?

என் காது அடைபட்டு,

வாய் தடைபட்டு,

கண்கள் மட்டும்

காதல் சொல்கின்றன.

அவளதைக் கேட்டதாய் 

தெரியவில்லை!

பேசிமுடித்து

திரும்புகையில் லேசாய்

சிரித்து செல்கிறாள்!

 

ஓடு! ஓடிச்செல்!

வெளிப்படுத்து!

அவளை ஆட்கொள்!

உள்ளம் சொல்லினாலும்,

வீட்டின்நிலையை

கணநேரம் யோசித்து,

அமைதியாய் நிற்கிறேன்!

எனக்கு தெரியும்,

நானிழந்த பல தேவதைகளில்

இவளும் ஒன்று!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.