(Reading time: 10 - 19 minutes)

கொஞ்ச நேரத்தில் ப்ரோகிதரும் வந்துவிட அவர் கேட்பதை எல்லாம் எடுத்துக்கொடுத்தனர் அகல்யாவும் தமிழும். அதுவரை சந்தோச மனநிலையில் இருந்த நந்தன் அப்பொழுது தான் பிரியா அவ்விடம் இல்லாததை உணர்ந்தான். தன் அன்னையிடம் சென்றவன் "ம்மா ப்ரியா எங்க..." என்று கேட்க "உங்க அண்ணி பார்த்துட்டு வர போய் இருக்கா... இந்தா நீ இதை கொண்டு போய் கோவில்ல வைச்சுடு " என்று ஒரு தட்டை அவனிடம் கொடுத்தபடியே பதிலளித்தார். 

 

ப்ரியாவோ தன் முன் வைக்கப்பட்டிருந்த அரக்கு நிறத்தில் லேசான தங்க ஜரிகையுடன் இருந்த புடவையையும் அதற்கு ஏற்றார் போன்ற நகையையும் பார்த்து குழப்பமுற்றவளாய் நின்றுக்கொண்டிருந்தாள். அவளது தோளில் ஆதரவாய் கையை வைத்த தமிழோ "என்ன யோசனைங்க...?" என்று கேட்க அதை உணர்ந்தவள் "இல்லை.... இந்த புடவை நகைலாம் எதுக்கு...?" என்று இழுக்க "வீட்டுல பூஜைன்னு அத்தை சொன்னார்களா அதுக்கு தான்....." என்று சிரித்த முகமாய் கூறினாள். 

 

"அட நேரமாச்சு சீக்கிரம் போய் புடவை மாத்திட்டு வாங்க..." என்று அவளை மேலும் யோசிக்க விடாமல் அவசரப்படுத்தினாள் முத்தமிழ். அவங்க வீட்டுல பூஜை நாம இங்க இருக்குறதால அதுக்கு ஏத்தமாதிரி நம்மையும் வர சொல்லிருக்காங்க அவ்வளவு தான் என்று ஒரு முடிவுக்கு வந்தவளாய் ப்ரியாவும் "நான் வரேன் நீங்க போங்க..." என்று கூறிவிட்டு கதவை தாழிட்டுக்கொண்டாள். 

 

அடுத்த பத்து நிமிடத்தில் பட்டு புடவையில் கிளம்பி வந்தவள் நகையை மட்டும் அணியவே இல்லை. ஏற்கனவே தமிழ், பிரியா கேட்டதை அகல்யாவிடம் கூறியிருக்க அவள் இந்தமட்டும் கிளம்பி வந்ததே போதும் என்று நினைத்தவர் மேலும் அவளை வற்புறுத்தவில்லை. தலையில் பூவை மட்டும் தானே வைத்துவிட்டார். 

 

பூஜைக்கான நேரம் நெருங்கிவிட்டதாய் புரோகிதர் கூற அனைவரும் அந்த வீட்டின் முன் இருந்த கற்பக விநாயகர் சன்னதியில் கூடி இருந்தனர். அவர் மந்திரங்கள் ஓதி அபிஷேகமும் செய்துவிட்டு "யாரு மா புதுசா வேலைக்கு போறது???" என்று அவர் கேட்க அகல்யாவோ "கிருஷ்ணப்ரியா" அந்த பெயருக்கு அர்ச்சனை பண்ணிடுங்க ப்ரோகிதரே என்று கூற அந்த பூஜை எதற்காக என்பதே அப்பொழுது தான் அனைவருக்கும் புரிந்தது. 

 

அவர்களது வீட்டில் ஒரு வழக்கம் உண்டு... எந்த ஒரு புது வேலையை தொடங்கும் முன்னும் அது தொழிலாய் இருந்தாலும் சரி, மருத்துவமனையில் என்றாலும் சரி விநாயகருக்கு அபிஷேகம், அர்ச்சனை நிச்சயம் நடைபெறும். இன்றும் அப்படியே.... 

 

பிரியா தான் இன்று முதல் நந்தன் மருத்துவமனையில் புதிதாய் பணியில் சேர போகிறாள். அனைவருக்கும் இது புது செய்தியே இருவரை தவிர. பூஜை என்று சொல்லி அறைக்கு சென்ற மனைவியை பின் தொடர்ந்த நந்தகோபாலன் "எதற்கு திடீரென பூஜை..." என்று கேட்க அகல்யாவோ "ப்ரியா நம் மருத்துவமனையில் பணிபுரிய...." என்பதோடு முடித்துக்கொண்டார். மனைவியின் பேச்சை அந்த கணவனால் மீற முடியுமா என்ன.... அவரும் சரி என ஒப்புக்கொண்டார். 

 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.