இதில் வேடிக்கை என்னவென்றால் அகல்யாவின் இந்த முடிவு மருத்துவமனையில் பணிபுரிய இருப்பவளுக்கு கூட தெரியாது. ப்ரோகிதரிடம் ப்ரியாவின் பெயரை சொன்னதும் நந்தனின் மனதில் ஓராயிரம் உணர்வலைகள். அவனும் இதே முடிவுடன் தான் இருந்தான் ப்ரியாவை தன் கண்முன்னால் வைத்திருக்க வேண்டும் என்று எப்படியும் அவள் ஒரு மருத்துவமனையில் பணிபுரிய தான் போகிறாள்... அது ஏன் அவர்களது மருத்துவமனையாக இருக்கக்கூடாது என்று அவனும் யோசித்தான். அவள் இனியும் தனித்திருக்க அவன் விரும்பவில்லை.
மகனின் மனதை உணர்ந்த தாய் அவனுக்காக செய்த செயலும் அந்த தாயின் அன்பும் அவனை இன்றும் ஆச்சர்யப்பட வைத்தது. அர்ச்சனை , தீபாராதனை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் கொடுக்க பிரமை பிடித்தது போல நின்றிருந்த பிரியாவிற்கு புரோகிதரே திருநீறை வைத்துவிட்டார்.
அவரது தொடுகையால் தன்னுணர்வு பெற்றவளின் மனதினுள் குமுறிக்கொண்டிருந்தாள்.
அகல்யா சொல்வதை எல்லாம் ஏனோ அவளுக்கு மறுக்க தோணியதே இல்லை. இருப்பினும் அவர் தனக்காக ஏன் இவ்வாறு எல்லாம் செய்ய வேண்டும் என்று கேள்வி அவளுள் சுற்றிக்கொண்டே இருந்தது.
பின் அனைவரும் காலை உணவு உண்டுவிட்டு அவரவர் பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர்.
தாத்தாவும், ஆதியும் கடைக்கு செல்ல நந்தனுடன் காரில் மருத்துவமனைக்கு பயணித்துக்கொண்டிருந்தாள் பிரியா. இதுவும் அகல்யாவின் வேலை தான். அவர்களது மருத்துவமனையில் பணிபுரிய மறுத்தவளிடம் கண்டிப்பை காட்டி ஒத்துக்கொள்ள வைத்தவர் நந்தனுடனே மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார்.
அகல்யா சொல்வதை தலையாட்டி பொம்மை போல ஏன் செய்கிறாள் என்பது அவளுக்கே புரியாத புதிர் தான். காரணம் அவரது வயதா, அவரது அக்கறையா, அவரது கண்டிப்பா, அவரது சாந்தமான முகமா, இல்லை அவளது ஏக்கமா, அவளது எதிர்பார்ப்பா, அவளது தனிமையா, வானதியின் இழப்பா, எதுவென்று தான் அவளுக்கு புரிபடவில்லை.