முள்ளும் கல்லும் நிறைந்த பாதை
முழுவதும் வலியை தந்திடுமே...
விழிக்கு தெரிந்தால்
விலக்கிவிட்டு செல்லலாம்...
விழி அறியாமல் மறைந்து இருக்கும்
வலி தரும் முட்களை என்ன செய்வது?
கண்களுக்கு தப்பிவிடும் கூரிய
கற்களை எப்படி தாண்டி செல்வது?
வாழ்க்கை பயணத்தில் தினம் தினம்
வந்து போவது முட்களும் கற்களுமே...
விதவிதமான எதிர்பார்ப்புகளோடு தோன்றி
விதவிதமான அனுபவங்களோடு முடிகிறதே...
எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும் என்றாலும்
எதிர்பார்ப்புகளும் குறையவில்லை...
ஏமாற்றங்களும் பழகவில்லை....
இங்கு முட்களும் கற்களும் தாக்குவது பாதங்களை இல்லையே....
பாசத்திற்கு ஏங்கும் இதயத்தை அல்லவா...
தாக்குதல் பலமுறை நடந்தாலும்
தடுத்திடும் கேடயம் தெரியாததால்
துவண்டு துவண்டு போய்
துடிக்கிறது இதயம்....
மருந்திட்டு ஆற்றிட ஒரு முறை
ஏற்பட்ட காயம் அல்ல...
மருந்தில்லாமல் தேடி அலைய வைக்கும்
மனதின் ரணம் அல்லவா...
வார்த்தைகளும் இருபுறம் கருக்குள்ள
வாள் என்று அறிந்திட்டேன்...
ஒவ்வொரு முறை துளைக்கும் போதும்
ஒரு சாவை கண்டு மனம் மீள்கிறதே...
மீண்டும் மீண்டும் துளைத்திட்டதால்
காயம் இனி மறைய போவதில்லை...
காயம் ஆற்ற விளையவுமில்லை...
காயம் தாங்கும் வலிமை தேடுகிறேன்...
என் வலியை நீ உணர
நான் நீயாக வேண்டும்
நீ நானாக வேண்டும்....
உணர்ந்து பார்க்கும் வரை
உயிரைக் குடிக்கும் வழியை நீ உணராய்..
உணர மறுக்கும் உன் இதயம்
உணர்வற்று நிற்கும் பாறை கல்லானால்
உணர்ந்து துடிக்கும் என் இதயம் உன்னை
உணரவைக்கும் உறை மழையாகும்...
காத்திருக்கிறேன் அந்நாளுக்காக...