“முதல்ல அப்பா குளிக்கட்டும்.”
“உங்க அப்பா குளிக்கறதும், குளிக்காததும் நேரத்தைப் பொறுத்து இருக்கு. நேரம் ஆயிட்டுதுன்னா, அவரு வழக்கமா வர்றது மாதிரி குளிக்காமலே வந்துடுவார். அப்படியே குளிச்சாலும், பழையபடி அரவை மிஷின்ல புரளத்தான் போவாரு...”
“நான் மிஷின்ல புரளாட்டா நீ தங்க நகையில புரள முடியாதுடி! பார்த்துப் பேசு... பிடிச்சாலும் பிடிச்சேன் புளியமரமாப் பிடிச்சேன்னு சொன்னவள், நீதான். மறந்துடாதே.”
“நான் மறக்கல... புளியமரம் குளிக்காது - மழையில தான் நனையும்!”
“போய் உடம்புல பட்டுச்சேலையை சுத்துடி...”
மல்லிகா சிரித்துக் கொண்டே, குளியலறைக்குள் போனாள். பார்வதி, உள்ளே போய், ஒரு நாட்டுப் புடவையை எடுத்து, சொக்கலிங்கத்திடம் தவறிப் போய் “மல்லிகாகிட்டே கொடுங்க” என்று சொல்லப் போனதற்காகச் சிரித்துக் கொண்டே, குளியலறைக்குப் போய் கதவின் இடுக்கில் அந்தப் புடவையை முன்பாதி உள்ளேயும், பின் பாதி வெளியேயுமாய் தொங்கப் போட்டுவிட்டு, தான் அலங்காரம் செய்து கொள்ள அறைக்குள் போனாள்.
----------
முற்றும்