வரையில் பார்த்து விடுகிறேன். பிறகு பகவான் இருக்கிறான்” என்று நம்பிக்கையுடன் பவானி அவருக்குப் பதில் அளித்தாள்.
டாக்டருக்கு அவளுடைய தைரியத்தைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது . அவரால் முடிந்த வரையில் வைத்தியம் செய்தார். அருகில் இருக்கும் பசுமலையில் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி, தான் அடிக்கடி வந்து கவனிப்பதாகவும் கூறினர்.
பசுமலை கிராமத்துக்கு வந்த பவானிக்குப் படிப்படியாக ஏமாற்றமே ஏற்பட்டது. கணவனைக் காச நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று உறுதி பூண்டு அந்தக் கிராமத்துக்கு வந்தாள். ஆனால், கடவுளின் கருணை தான் அவள் விஷயத்தில் வற்றி விட்டதோ அல்லது விதியின் விளையாட்டுத்தானோ? அதை யார்தாம் தீர்மானித்துப் பதில் கூற முடியும்? அங்கு வந்த சில மாதங்களில் வாசு இறந்து விட்டான். அன்று உலகமே அவள் வரைக்கும் அஸ்தமித்து விட்டது போல் இருந்தது . இனிமேல் வாழ்க்கையில் அவளுக்கு என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை என்று தீர்மானித்தாள் பவானி. இல்லை என்பதற்குப் பவானிக்குப் பொருள் விளங்கி விட்டது. ஒரே சூன்யமான நிலைக்குத்தான் அப்படிப் பெயர் வைத்திருப்பதாக அவள் நினைத்தாள்.
இவை யெல்லாம் பழைய நினைவுகள். ஆனால் அவள் மனதில் பசுமையுடன் பதிந்திருப்பவை வியாதியை வென்று எப்படியாவது தானும் கணவனும் இன்ப வாழ்க்கை நடத்தவேண்டும் என்று துடித்த உள்ளத்துக்கு ஆறுதல் தரும் நினைவுகள் என்று அவற்றைச் சொல்ல வேண்டும்.
பவானி பெருமூச்சுடன் படுக்கையில் உட்கார்ந்தாள். கீழ் வானத்தில் உதயத்தின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. தொலைவிலே தெரியும் அந்த ஒளிதான் விடி வெள்ளியோ? சூரிய உதயத்திற்கு முன்தோன்றும் விடிவெள்ளி என்று இதைத்தான் சொல்லுகிறார்களோ? திரும்பிப் படுக்கையைப் பார்த்த பவானியின் கண்களுக்குப் பாலுவும் ஒரு விடி வெள்ளியாகவே தோன்றினான். ஆம் இன்று சிறு பையனாக இருப்பவன் நாளை உதயசூரியனாக மாறி புண்பட்ட அவள் மனத்துக்கு ஆறுதல் அளிப்பவனாக இருக்கலாம்.
பாலுவின் தூக்கம் கெடாமல் பவானி உள்ளம் கசியக் குனிந்து, பாலுவின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.
--------------
தொடரும்