"நானும் இனி உங்களைப் புகழவில்லை; மற்ற அங்கத்தினர்களையும் எச்சரித்து வைக்கிறேன். கிளப்பில் சேராமல் இருந்து விடாதீர்கள். இந்தச் சூழ்நிலை கொஞ்சம் 'கலர்ஃபுல்' ஆக இருக்கட்டும்" என்றார்.
"இன்னும் ஒரு நிபந்தனை."
"என்ன அது?"
"நீங்கள், போங்கள், வாருங்கள் என்று மற்றவர்கள் என்னிடம் பேசட்டும். ஆனால் உங்களைப் பொறுத்தவரை அந்த மரியாதையெல்லாம் என்னிடம் கூடாது." மாஜிஸ்திரேட் சிரித்தபடியே, "இது என் வயதுக்கு நீங்கள் தரும் சலுகையா? அல்லது பதவிக்கா?" என்று கேட்டார். "இரண்டுக்கும் மேலே நம் நட்புக்கு ஓர் அடையாளமாக!" கோவர்த்தனன் தாம் உறிஞ்சிக் கொண்டிருந்த லெமனேடை மேஜையின்மேல் வைத்து விட்டு, அவளை நேருக்கு நேர் பார்த்து, "உன்னை ஒரு மர்மமான பெண் என்று பலர் என் காதுபடக் கூறுவதில் உண்மை இருக்கிறது" என்றார். "உன் பேச்சிலும் மர்மம் இழையோடுகிறது." "அட ஆண்டவனே! நான் மர்மங்களை விடுவிக்கவே கல்வி கற்றேன். தொழிலும் பயிலுகிறேன். மர்மங்களை சிருஷ்டிக்க அல்ல. உங்களுக்குத் தெரியாததா?" "அது சரி, ஆனால் நீ திடுதிப்பென்று ராமபட்டணத்தில் எப்படி முளைத்தாய்? எங்கிருந்து வந்தாய்? ஏன் வந்தாய்? முதலிய பல விவரங்கள் மர்மமாகத்தானே உள்ளன?"
"யாருக்கும் ஒரு மர்மமும் இதில் தேவையில்லை. ஒரு பொதுக்கூட்டம் போட்டு வேண்டுமானால் பேசி விடுகிறேன்."
"பொதுக்கூட்டம் எதற்கு? ராமப் பட்டணம் அப்படியொன்றும் பெரிய ஊர் இல்லை. இங்கே வருகிறானே கல்யாணசுந்தரம் என்று ஒரு பையன் அவனிடம் சொன்னால் போதும். ஊர் முழுவதும் தமுக்கு அடித்து விட்டு வந்து விடுவான்."
பவானி மெளனமானாள். கல்யாணத்தை அவர் சற்று அலட்சிய பாவத்துடன் ஏளனமாகப் பேசியது அவளுக்குப் பிடிக்கவில்லை.
"மர்மமான மெளனம்" என்றார் கோவர்த்தனன்.