இத்தருணத்தில் கல்யாணம் எதிர்பார்த்த நற்பலன் கிடைத்தது. இதற்குமேல் பொறுத் திருக்க முடியாதவனாக மணி முன்னால் பாய்ந்து வந்தார். "வாயை மூடுய்யா! ஏதோ போகட்டும் என்று பார்த்தால் மேலே மேலே பேசிக் கொண்டே போகிறாயே!"
கோவர்த்தனன் திடுக்கிட்டார். மணி அங்கே மறைவிலிருந்து உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார் என்பது அவருக்கு அப்போதுதான் தெரிந்தது. "மணி உள்ளே போ!" என்று அதட்டினார்.
"முடியாது!" என்றார் மணி! "முடியவே முடியாது. இத்தனை நாட்களாக எனக்கு மூக்கணாங் கயிறு போட்டு வைத்திருந்தாய். இப் போது நான் அதை அறுத்துக் கொண்டு விடுதலை பெற்று விட்டேன். இனி என்னால் சும்மா இருக்க முடியாது! உமாகாந்துக்கு மறுபடியும் நீ கடுமையான தண்டனை விதிக்கப்போவதைப் பார்த்துக் கொண்டு நான் பேசாமல் இருக்க மாட்டேன்."
"மணி! நீ எனக்குக் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று? சத்தியத்தை மீறலாமா நீ!"
"இத்தனை நாட்களாக அதற்குக் கட்டுப் பட்டுத்தான் இருந்தேன். ஆனால் இப் போது உன் நடத்தை எல்லை மீறிப் போகிறது. நான் பொறுமை இழந்து நிற்கிறேன்."
"அப்படியானால் சரி, நடந்ததை யெல்லாம் விவரமாகச் சொல்லு" என்று அமைதியாகக் கூறினார் கோவர்த்தனன். பிறகு கல்யாணம் பக்கம் திரும்பி, "அப்பனே! நீயும் பவானி போலவே உமாகாந்தனை விடுவிக்க மிகவும் ஆவலுள்ளவனா யிருப்பது எனக்குத் தெரியும். சற்று நேரமாகச் சும்மா என்னிடம் நடித்துக் கொண்டிருந்தாய் இல்லையா? உமாகாந்தனை விடுவிக்க ஏதாவது சாட்சியம் அகப்படுமா என்று பார்க்கத்தானே என் வாயைக் கிளறிக் கொண்டிருந்தாய்? இதோ கிடைத்து விட்டது. மணியைச் சாட்சிக் கூண்டில் ஏற்று; உமாகாந்தனை விடுவித்து விடலாம் நீ!"
அளவற்ற வியப்பும் திகைப்பும் அடைந்தவனாகக் கல்யாணம் மணியையும் கோவர்த்தன்னையும் மாறி மாறிப் பார்த்தான். கோவர்த்தனன் மணியை நோக்கி, "சொல்லேனப்பா ஏன் தயங்குகிறாய்? சொல்லு!" என்றார்.