"ஒன்று என் ராஜிநாமாக் கடிதம். மற்றொன்று என் குற்றத்தை நானே ஒப்புக் கொண்டு எழுதிய வாக்குமூலம்."
"மாஜிஸ்திரேட் ஸார்! இது என்ன தாக்குதலுக்கு மேல் தாக்குதலா யிருக்கிறதே!" என்றான் கல்யாணம் நாத் தழுதழுக்க.
மணி நின்றபடியே விசும்பி அழுதார்.
"கல்யாணம், நான் சொல்வதைக் கவனி. மணி, நீயும் கேட்டுக் கொள்!" என்றார் கோவர்த்தனன். "இந்த வாக்குமூலத்தையும் ராஜிநாமாக் கடிதத்தையும் கல்யாணம் இங்கு வந்த பிறகு நான் எழுதவில்லை. அதற்கு முன்பே எழுதி என் பாக்கெட்டில் வைத்திருந்தேன். அந்த மட்டில் ஒப்புக்கொள்வீர்களல்லவா?"
"உண்மைதான் ஸார், நான் இங்கே வந்த பிறகு, நீங்கள் விஸ்கி டம்ளரைத் தவிர பேனாவையோ தாளையோ கையால் தொடவில்லையே?" என்றான் கல்யாணம்.
"கரெக்ட்! ஆக, மணியின் சாட்சியம் உனக்கு அகப்பட்டு விட்டபடியால் இனி நான் தப்ப முடியாது என்ற நிலையில் இவற்றை நான் எழுதவில்லை. அதற்கு முன்பே எழுதி விட்டேன். எழுதத் தூண்டியது என்ன தெரியுமா?"
"தெரியவில்லையே ஸார்!"
"என் தம்பி உமாகாந்தனின் தியாகம்தான்! இப்போது அவன் பிடிபட்டதும் பவானி அவனை வழக்காடுமாறு வேண்டினாள். அவன் மறுத்து விட்டான். இரண்டாவது தடவையாகத் திருட்டுக் குற்றத்தைத் தன்மீதே சுமத்திக் கொண்டான். அதுமட்டுமில்லை. பவானியை விடுவிக்க வேண்டும் என்பதற்காக மறுபடியும் புதிய குற்றச்சாட்டுக்களை தன்மீதே சுமத்திக் கொண்டான். அவளுக்குத் தன்னை யார் என்று தெரியாது என்றும் தப்பிச் செல்லத் தனக்கு உதவுமாறு அவளைத் தான்தான் நிர்ப்பந்தப்படுத்தியதாகவும் வாக்குமூலம் எழுதிக் கொடுத்தான். இந்த வாக்குமூலம் அவனுக்குக் கிடைக்கக்கூடிய தண்டனையை மேலும் அதிகரிக்கும் என்பதை