மக்களைப் பார்த்து நடப்பது? முன்காலத்தில் நம் நாட்டு நாகரிகமே ஒரு கிராம அமைப்புப் போல் தெளிவாக எளிமையாக இருந்தது. இப்போது நம் நாட்டு வாழ்க்கை ஒரு சந்தைபோல் பெருங் கலப்பாக ஆவாரமாக ஆகிவிட்டது. ஆகையால் இப்போது உலகத்தாரைப்போல் நடப்பது என்றால் யாரைப் பார்த்து நடப்பது? கணவன் மனைவி என்ற இரண்டே பேர் தனிக்குடும்பம் நடத்துகிறவர்கள் இதோ நம்முடைய பெரிய குடும்பத்தைப் பார்த்துப் பின்பற்ற முடியுமா? கிராமத்துக் குடும்பம் நகரத்துக் குடும்பத்தைப் பார்த்துப் பின்பற்ற முடியுமா? நகரத்தில் பஸ் பயணத்துக்குக் காசு இல்லாதவர்கள் கார் வைத்து வாழ்பவர்களைப் பின்பற்ற முடியுமா?"
"இதே போராட்டம்தான். எல்லாம் வரவு செலவு வகையில் வரும் துன்பங்கள்தான்."
"பார்த்தாயா, மணிமேகலை! இப்போது தெரிந்து கொண்டாயா? அடிப்படையில் இந்தக் குறை இருக்கும்போது உலகத்தைப் பார்த்து வாழவேண்டும் என்று ஏன் சொல்கிறாய்?"
"நான் வரவு செலவு வகையில் தலையிடப் போவதே இல்லை அம்மா! பேசாமல் சமைத்துப் போட்டுக்கொண்டு கவலை இல்லாமல் இருக்கப்போகிறேன்" என்றாள் என் மனைவி குறுக்கிட்டு.
"உனக்கு என்ன அண்ணி! அண்ணனுக்குச் சம்பளம், படி எல்லாம் முந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வரும். தடபுடலாகக் குடும்பம் நடத்தலாம். நாங்கள் எழுபது ரூபாய்க்கு ஏங்குகிறோம். நீ கேட்டு வந்தவள்" என்றாள் தங்கை.
தங்கையின் சொல்லைக் கேட்டதும் என் உள்ளம் வருந்தியது. ஏழைக்குக் கொடுத்தோமே என்று கவலை எங்கள் உள்ளத்திலே முதலிலிருந்தே இருந்துவந்தது. இருந்தாலும், அன்று தங்கையே வாய்விட்டுக் குடும்பத் துன்பத்தைச் சொன்னபோது வேதனையாக இருந்தது. என்ன செய்வது. கொடுத்துவிட்டோம், இனி எப்படியாவது வாழவேண்டும் என்று மனம் ஆறுதல் அடைவதைத் தவிர வேறு வழி இல்லை. முதலில் தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொன்னபோது எனக்கு அவர்மேல் வெறுப்புத் தோன்றியது. அன்பும் இரக்கமும் இல்லாத கல் நெஞ்சராக இருக்கிறாரே. கதர் உடுத்தும் காந்தி நெறியராக இருந்தும் இப்படி நடக்கக் காரணம் என்ன என்று வருந்தினேன். அடிப்படைக் காரணத்தை நான் உணரவில்லை. ஆனால் பாக்கிய அம்மையார் எவ்வாறோ உணர்ந்து கொண்டார். அதனால்தான் அந்தப் போக்கில் பேசி அறிவுரை