Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 21 - மு. வரதராசனார்
பி.ஏ. தேர்வு நன்றாகவே எழுதி முடித்தேன். நல்ல வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. மாலன் அவ்வளவு நம்பிக்கையோடு பேசவில்லை. மூன்றாம் பகுதியைப் பற்றிக் கவலைப்பட்டான். "நீ எப்போதும் இப்படித்தான். உனக்கு எத்தனையோ நம்பிக்கைகள் உண்டு. உள்ளதைச் சொல்ல மாட்டாய்" என்றேன்.
"உனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லையா?" என்றான்.
"உழைப்பில் நம்பிக்கை உண்டு. அறத்தில் நம்பிக்கை உண்டு."
"கூடிய வரையில் உழைக்கிறோம். எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் சொல்வது?"
"ஒன்று. நம் உழைப்பிலேயே ஏதாவது குறை இருப்பதாகக் கருதவேண்டும். அல்லது, உலகம் ஏமாற்றிவிட்டதாகக் கருதவேண்டும்."
இப்படிப் பேசிக்கொண்டே புத்தகம், படுக்கை முதலியவைகளைக் கட்டி ஒழுங்கு செய்தேன். விடுதியை விட்டுப் புறப்பட்டபோது வருத்தமாக இருந்தது. அடுத்த ஆண்டில் எம்.ஏ. வகுப்பில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு புறம் இருந்தபோதிலும், வேண்டா என்று தந்தையார் தடுத்து நிறுத்திவிட்டால், இனி விடுதி வாழ்க்கை ஏது என்று வருந்தினேன். உள்ளத்தில் விடுதிக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டேன். வழக்கம்போல் மாலனும் நானும் ஒன்றாகவே பயணம் செய்தோம். அரக்கோணத்தில் அவன் பிரிந்தான். பிரிந்தபோது, "நம்முடைய மாணவ வாழ்க்கை இன்றோடு முடிந்தது" என்றான். "ஆனாலும் நாம் என்றும் நண்பர்களாக இருக்கவேண்டும்" என்று சொல்லி விடைபெற்றேன்.
படிப்பு முடிந்ததும் விடுதலையுணர்ச்சி ஏற்படும் என்று அதற்குமுன் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு மாறாக, அதுவரையில் இருந்த உரிமை வாழ்வு குறைவது போல் உணர்ந்தேன். வீட்டில் தங்கையின் திருமணம் பற்றிய பேச்சு மிகுந்திருந்தது. அதைப்பற்றிப் பேசியபோது தாயின் முகத்தில் கவலை இருந்தது. தந்தையின் முகத்தில் என்றும் இருந்த கவலை அப்போது மிகுதியாகத் தோன்றியது. சென்னையிலிருந்து ஒரு குடும்பத்தார் வந்து பெண் கேட்டார்களாம். பிள்ளை எம்.ஏ. படித்த பிள்ளையாம். ஒரு வீடு சென்னையில் வாங்கி