வளர்ந்திருந்ததை உணர்ந்தேன்.
மறுபடியும் பழைய கேள்வியையே கேட்டார். "கயற்கண்ணியைவிடப் பழக்கமான பெண்ணாக நல்ல பெண்ணாக இருந்தால் சொல்" என்றார்.
பேசியும் பயன் இல்லை, பேசாமலிருந்தும் பயன் இல்லை என்று உணர்ந்தேன்.
திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்தன. அரிசி முதல் சர்க்கரை வரையில் எல்லாப் பொருள்களும் வந்து சேர்ந்தன. உறுதிப்படுத்தும் சடங்குகள் இரண்டும் நடந்தன. அழைப்புகள் இங்கும் அங்கும் பறந்தன. அந்த வேலைகளில் நானும் கலந்து கொண்டேன். ஆற்றின் சுழற்சியில் நானும் சிக்கிக் கொண்டேன். சுழல் கடந்தும், ஆற்றின் போக்கிலேயே ஓடினேன். சந்திரனுக்கும் மாலனுக்கும் அழைப்புகள் அனுப்பிக் குடும்பத்தோடு வருமாறு தனிக் கடிதங்களும் எழுதியிருந்தேன்.
மாலன் மட்டும் திருமணத்திற்கு முந்திய நாளே வந்திருந்தான். கற்பகம் நிறைந்த கர்ப்பமாக இருந்ததால் வரமுடியவில்லை என்று சொன்னான்.
"உன் மைத்துனன் சந்திரன் வருவானா?" என்று கேட்டேன்.
"எனக்கு நம்பிக்கை இல்லை"
"ஏன் அப்படி?"
"அவன் எங்கும் போவதில்லை. உள்ளூரிலேயே எல்லாரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறான். என்னோடும் நெருங்கிப் பேசுவதில்லை. பழகுவதையே வெறுஞ் சடங்காக வைத்துக்கொண்டிருக்கிறான்."
"காரணம் என்ன?"
"நான் சொன்னால் நீ ஒப்புக்கொள்ளமாட்டாய். குற்றமுள்ள நெஞ்சு வெளியே வந்து பழகப் பயப்படுகிறது."