"தங்கையைப் பற்றி நீ கவலைப்பட்டுப் பயன் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று திருவள்ளுவர் அந்தக் காலத்திலேயே சொன்னாரே" என்றார்.
திருக்குறளை மேற்கோளாகச் சொன்னவுடன் எனக்கு வியப்பாக இருந்தது. அந்த அம்மையாரின் படிப்பு திரு.வி.க நூல்களிலிருந்து திருவள்ளுவர் வரையில் போய் விட்டதே என்று வியந்தேன். ஏதாவது மறுமொழி சொல்லியாக வேண்டுமே என்று, "இன்னும் கொஞ்ச காலம் பொறுக்கலாமே" என்றேன்.
"பொறுப்பதால் பயன் இல்லையே; தங்கைக்கு வயது பதினெட்டு ஆகிவிட்டது. இனிமேல் பொறுத்தால் மட்டும் நல்ல மாப்பிள்ளையாகக் கிடைப்பானா? வயது ஆக ஆக மாப்பிள்ளை வருவது குறையும். படிப்பும் பணமும் இருந்தால், அல்லது பணம் மட்டும் இருந்தாலும் சரி, முப்பது வயது வரையில் பொறுத்திருக்கலாம். வாழ்க்கையில் செல்வாக்கு இருந்தால், அதற்கு மேலும் பொறுத்திருக்கலாம். நம்மைப் போன்றவர்கள் பொறுத்திருப்பதால் பயன் இல்லையே."
"தங்கைக்கு அல்ல, எனக்குச் சொல்கிறேன்."
"உனக்கும் அப்படித்தான். இனிமேல் படிப்பதாக இருந்தால் நீ சொல்வது சரி. படிப்பு இனிமேல் இல்லை என்று முடிவாகிவிட்ட பிறகு, திருமணம் செய்துகொள்வது நல்லது. பணக்காரக் குடும்பத்தினர் உன்னைத் தேடி வருவார்கள். விருப்பமாக இருந்தால் சொல். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விருப்பம் இல்லை. அவர்களுக்குச் சமமாகப் பணம் இல்லாவிட்டால், நம்மை மதிக்கமாட்டார்களே என்று அம்மாவும் அப்பாவும் அஞ்சுகிறார்கள். ஆகவே பொருளாதாரக் கவலை தான் இதற்கும் காரணம். அத்தை மகள், அக்கா மகள் என்று பழங்காலத்தில் சில குடும்பங்களுக்குள்ளேயே திரும்ப திரும்பப் பெண் கொண்டதற்கும் இந்தப் பொருளாதாரக் கவலைதான் காரணம் என்று எண்ணுகிறேன். இந்த கவலை தீரும் வரையில் உலக சமுதாய வாழ்க்கையில் நல்ல மாறுதல் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது."
அந்த அம்மையாரின் இந்தப் பேச்சு எனக்கு மேலும் வியப்பை உண்டாக்கியது. வார இதழ்களையும் மாத இதழ்களையும் வாங்கித் தவறாமல் படித்து வருகிறார் என்று முன்னமே அம்மா சொல்லக் கேள்விப்பட்டேன். அப்படிப் படிப்பதால் இவ்வளவு தெளிவாக அறிவு