(Reading time: 13 - 26 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

  

"அம்மாவும் எதிர்பார்த்தார். சந்திரனுடைய மனைவி வருவாள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்."

  

"அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு போவதற்கு வெட்கப்படுகிறான். அவள் ஒரு பட்டிக்காட்டு மிருகமாம். அப்படிச் சொன்னதாகக் கேள்விப்பட்டேன்."

  

"இவன்தான் பட்டிக்காட்டு மிருகம்" என்றேன். என் உள்ளத்தில் தோன்றியதை அப்போது சொல்லாமலே இருந்திருக்கலாம். வெறுப்பு மேலீட்டால் சொல்லி விட்டேன். பக்கத்தில் இருந்தவர்கள் என்னை உற்றுப் பார்த்தார்கள்.

  

"எப்படியோ போகட்டும். நீயும் உன் மனைவியும் இன்று போலவே என்றும் பளிச்சென்றிருங்கள். நல்ல வழியில் நடந்து நல்ல பெயர் எடுக்கணும்" என்று எங்களை வாழ்த்தினார் சாமண்ணா.

  

நான் தனியே இருந்தபோது மாலன் வந்து, "கேட்டு வந்தவள் தான்" என்று குறும்பாகச் சிரித்தான்.

  

"ஏன் அப்படிச் சொல்கிறாய்" என்று அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கினேன்.

  

"கிராமத்துப் பெண்ணாக இருந்தாலும் நல்ல அழகும் அறிவின் களையும் இருக்கின்றன. எல்லா வகையிலும் உனக்கு ஏற்ற மனைவிதான்" என்றான்.

  

"உன்னுடைய மனைவியை விடவா?" என்றேன்.

  

"அவள் ஒருவகை, உன் மனைவி ஒரு வகை. அவளை ஏன் ஒப்பிடுகிறாய்" என்றான்.

  

ஒப்பிட்ட காரணம் என் உள்ளத்துக்கு தெரியும் அவனுக்குத் தெரியாது என்று எண்ணினேன். ஆனால், அவனுடைய சிரிப்பில் குறும்பு மிகுதியாக இருக்கவே, ஐயுற்றேன். "ஏன் அப்படிச் சிரிக்கிறாய்?" என்றேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.