எழுதி வைத்து கையில் ஐயாயிரம் கொடுத்து, திருமணச் செலவும் செய்ய வேண்டுமாம். குடும்பத்தையே விற்றாலும் அவ்வளவு செலவு செய்யமுடியாது என்று தந்தையார் வருந்தி அனுப்பிவிட்டாராம். வேலூரிலிருந்து இன்னொரு குடும்பத்தார் வந்தார்கள். பிள்ளை பி.ஏ. படித்தவனாம். பத்தாயிரம் ரூபாய் கொடுத்துத் திருமணம் நடத்தி வைக்கவேண்டும் என்றார்களாம், அதுவும் முடியாது என்று தந்தையார் மறுத்துவிட்டாராம். சேலத்திலிருந்து ஒரு குடும்பத்தார் வந்து, பணம் கேட்காமல் பெண் கேட்டார்களாம். பிள்ளை இண்டர் படித்தவராம். ஆனாலும், முதல் மனைவி இறந்து இது இரண்டாம் திருமணமாக இருப்பதால் தாய் விருப்பம் இல்லாமல் மறுத்துவிட்டாராம்.
கடைசியில் பத்தாவது படித்துப் பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவரின் குடும்பத்தார் வந்து பெண் கேட்டார்கள். பணம் ஒன்றும் தேவையில்லை என்றும், எளிய முறையில் திருமணம் செய்து வைத்தால் போதும் என்றும் கூறினார்கள். பெண்ணும் பத்தாவது படித்தவள் அல்லவா என்று அம்மா கொஞ்சம் தயங்கினார். "பையனை நான்கு ஆண்டுகள் விடுதியில் சேர்த்துக் கல்லூரியில் படிக்க வைத்ததற்கே எவ்வளவோ செலவு ஆயிற்று. சின்ன மளிகைக் கடையில் எவ்வளவுதான் நான் ஒருவன் சம்பாதிக்க முடியும்? பி.ஏ., எம்.ஏ., பார்த்துப் பத்தாயிரம் பதினைந்தாயிரம் கொடுக்க என்னால் முடியாது. நீங்கள் எப்படியாவது போங்கள்" என்று அப்பா தம் உள்ளத்தின் குமுறலை எடுத்துரைத்த போது அம்மா பேசாமல் இசைந்துவிட்டார்.
படித்த மாப்பிள்ளை வீட்டாரின் இரக்கமற்ற பண வேட்டையையும் பெண்ணைப் பெற்ற பெற்றோரின் மனவேதனையையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என் குடும்பத்திலேயே இந்த அனுபவத்துக்கு ஆளானபோது, உலகப் போக்கை மிக மிக வெறுத்தேன். படிப்பு எங்கே? பண்பு எங்கே? அழகுக்கு அழகு; அறிவுக்கு அழகு; அன்புக்கு அழகு என்று விலை போகும் கொடுமையை நன்றாக உணர்ந்தேன். சான்றோர்கள் நூற்றுக்கணக்காகப் பிறந்த நாடு, உயர்ந்த நூல்கள் பற்பல தோன்றிய நாடு, கோயில்களும் அறநிலையங்களும் மலிந்த நாடு என்று பெருமை பேசிக்கொள்கிறோம். தொன்றுதொட்டே இந்த நாடு ஒன்றுதான் பாரமார்த்த நாடு என்றும், மற்ற நாடுகள் இன்று வரையில் உலகாயதப் போக்கிலேயே உழன்று வருகின்றன என்றும் மற்ற நாடுகளைக் குறை கூறிப் பெருமை கொள்கிறோம். ஆனால், படித்த இளைஞர்களும் பண்புள்ள அழகிகளும் பணத்துக்காக விலைபோகும் கொடுமை வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மலிந்துள்ளதாகக் கூறமுடியாது. திருமணக் காலங்களில் குடும்பங்களில் நடக்கும் பேச்சைச் செவிக்கொடுத்துக் கேட்டால் இந்த நாட்டிற்கு ஆத்மீகத் தொடர்பு மிகுதி என்று சொல்வதற்கு வாய் கூசும். இவ்வாறு எண்ணிக் கொதித்த என் மனத்தில் கோயில்களும்