"நீ கற்பகத்தை மணந்துகொள்ள எண்ணியிருந்தாயா?" என்று கேட்டு முன்னிலும் மிகுதியாகச் சிரித்தான்.
"இளமையில் திருமணத்திற்கு, முன்பு பார்க்கிற பெண்ணை எல்லாம் மணந்து கொள்ளலாமா? என்று மனம் தேர்ந்தெடுப்பது இயற்கைதானே?"
"அப்படியானால் கற்பகத்தை நீ விரும்பவில்லையா?"
"விரும்பினேன். ஆனால், உனக்காக விட்டுக் கொடுத்தேன்" என்று அவனை இரண்டு கைகளாலும் பற்றிக் குலுக்கினேன். "உனக்கு யார் சொன்னது?" என்றேன்.
"வேறு யார் சொல்ல முடியும்? அவள்தான். உன்னுடைய கடிதம் பார்த்த பிறகுதான் என்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டாளாம். அதுவரையில் திருமணமே வேண்டாம் என்று சொல்லி கொண்டிருந்தாளாம்."
"எந்தக் கடிதம்?"
"என்னைப் பற்றி நற்சான்று ஒன்று எழுதி அனுப்பினாயாமே. அந்த நற்சான்றின் பேரில்தான் எனக்குப் பெண் கொடுத்தார்களாம்."
"இவ்வளவுமா நினைவில் வைத்துக் கொண்டிருந்து சொன்னாள்."
"இந்தச் செய்திகளை வாழ்நாளில் எப்போதுமே மறக்க முடியாதே. நீதான் வேண்டுமென்றே என்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்தாய். நான் விடுவேனா? உன் திருமண நாளன்றே இதைச் சொல்லி உன்னைத் திகைக்க வைத்தேன்" என்று என் கைகளை இறுகப் பற்றி அழுத்தினான்.
கற்பகத்தின் பெருந்தன்மையும் பேரன்பையும் நினைந்து என் உள்ளம் உருகியது.