மறுபடியும் அவனே, "நீ பெற்ற பரிசு - உன் மனைவி - எந்த வகையிலும் குறைவான பரிசு அல்ல. வாழ்க பல்லாண்டு" என்று சொல்லி மகிழ்ந்தான்.
திருமணத்திற்கு மூன்றாம் நாள் தேர்வு முடிவுகள் வெளியாக இருந்தன. அதுவரையில் மாலனை வீட்டிலே தங்கியிருந்து மகிழுமாறு வேண்டிக்கொண்டேன்.
"தேர்வு முடிவுகள் வெளிவரும்போது நான் இங்கே இருக்கக்கூடாது. அதனால்தான் போகவேண்டும் என்கிறேன்" என்றான்.
"ஏன்?"
"நீ நன்றாக எழுதியிருக்கிறாய். நல்ல வெற்றிச் செய்தி வரும். எனக்கு அப்படி இருக்காது. நான் இங்கே இருந்தால் எனக்காக நீ வருந்துவாய் அல்லவா? உன் மகிழ்ச்சி, வருத்தம் கலக்காத மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணித் தான் போகிறேன்" என்று விடைபெற்றான்.
அவன் எதிர்பார்த்ததுபோலவே முடிவுகள் வந்தன. அவன் முதல் இரு பகுதியிலும் தேறி மூன்றாம் பகுதியில் தவறிவிட்டான். நான் முதல் பகுதியில் மூன்றாம் வகுப்பாகவும் இரண்டாம் பகுதியில் இரண்டாம் வகுப்பாகவும் மூன்றாம் பகுதியாகிய கணக்கில் முதல் வகுப்பாகவும் தேறி இருந்தேன். அப்பா உள்ளத்துள் ஏற்பட்ட மகிழ்ச்சியை எல்லாம் அடக்கிக் கொண்டு, வேண்டுமென்றே, "முதல் பகுதியிலும் ஏன் முதல் வகுப்பில் தேறவில்லை?" என்று கேட்டார், ஆங்கிலம் தாய்மொழி அல்ல என்றும் தாய் மொழியில் தருவதில்லை என்றும் சொல்லித் தப்பித்துக் கொண்டேன்.
----------
தொடரும்...