"ஆடும் மாடும் மனிதனை நெருங்கிப் பழகுவது போல், பாம்பும் புலியும் பழகுமா? தங்கள் இனத்தோடு பழகுவதும் இல்லையே. நானும் நீயும் குற்றம் இல்லாதவர்கள். ஆடுமாடுகள் போல் கூடி வாழ்ந்து பழகுகிறோம்."
"கட்டாயம் வருவான் என்று நம்புகிறேன். உனக்கு எழுதியது போல் கடிதமும் எழுதியிருக்கிறேன். பார்க்கலாம்" என்று சொல்லி மாலனிடம் எங்கள் இளமை நினைவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.
சந்திரன் அத்தையோடும் வேலைக்காரப் பையனோடும் முதல் முதலில் ஒரு வண்டியில் வந்து இறங்கியது. நான்காம் வீட்டில் குடியிருந்தது, அப்போது சந்திரன் அழகாகவும் அறிவாகவும் இருந்த நிலை, என் காற்றாடியை வேப்பமரத்தில் மாட்டி அறுத்தது, அதனால், நட்பு ஏற்பட்டது, பள்ளிக்கூடத்துக்குச் சேர்ந்து போய்ச் சேர்ந்து வந்தது, நாங்கள் உட்கார்ந்து பேசிய திண்ணைகள், விளையாடிய இடங்கள், பார்த்த வேடிக்கைகள், படித்த அறைகள் எல்லாவற்றையும் மாலனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
மறுநாள் காலையில் திருமண நேரத்திலும் சந்திரனை எதிர்பார்த்தேன். அப்போதும் வரவில்லை. சாமண்ணா ஒரு மூலையில் வந்து உட்கார்ந்திருந்ததை நானும் கவனிக்கவில்லை, மாலனும் சொல்லவில்லை. திருமணம் முடிந்த பிறகு அவர் என்னை நோக்கி எழுந்து வந்தார்.
"எப்போது வந்தீர்கள்?" என்றேன்.
திருமணம் தொடங்கியபோது வந்ததாகக் கூறினார், ஆசிரியரும் வந்திருந்ததைக் காட்டினார்.
"சந்திரன் வரவில்லையா? மனைவியோடு வருமாறு எழுதியிருந்தேன்."
"தெரியும். மருமகளுக்கு இங்கே வர வேண்டும் என்று ஆசைதான். நான் அழைத்துக் கொண்டு வந்தாலும் அவள் மேல் கோபம் கொள்வான். அவனாகவும் புறப்படவில்லை. கடைசியில், யாரும் போகாவிட்டால் நன்றாக இருக்காதே என்று நான் வந்தேன்."