Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 02 - நா. பார்த்தசாரதி
இரண்டு மூன்று நிமிஷ மௌனத்துக்குப் பின் மறுபடியும் சர்மா வசந்தியைக் கேட்டார்.
"உங்கண்ணா சுரேஷ் பாரிஸிலேயே இருக்கானே; அவனுக்கு உங்கப்பாவை விட்டுத் தகவல் எழுதச் சொன்னா ஏதாவது பிரயோஜனப்படுமோ...?"
"எங்கப்பா எதை எழுதி, அண்ணா என்ன செய்யணும்னு நீங்க எதிர்பார்க்கறேள் மாமா?..."
"ரவியும் அந்தப் பெண்ணும் இங்கே புறப்படறத்துக்கு முந்தி சுரேஷ் அங்கேயே அவாளைப் பார்த்துப் பேசி ஏதாவது பண்ணலாம்மோன்னு தோணித்து... அது சாத்தியமா இல்லையான்னு நீதான் சொல்லணும்..."
"நீங்க கேக்கற விஷயத்தைப் பத்தி என்ன பதில் சொல்றதுன்னே எனக்குத் தெரியலையே மாமா! நம்ம தேசத்துக்கும் ஐரோப்பா, அமெரிக்கா போல இருக்கிற மேனாடுகளுக்கும் இந்த மாதிரிப் பிரச்சனைகளை அணுகறதிலேயே ரொம்ப வித்தியாசம் உண்டு. இங்கேயிருந்து போய் அங்கே வசிக்கறவாளுக்குக் கூட நாளாக நாளாக அந்த தேசங்களின் தாராள மனப்பான்மை, 'பெர்மிஸிவ்னெஸ்' எல்லாம் வந்துடறது. உங்க பிள்ளை ரவியும் கமலியும் காதலிக்கிறதைப் பத்திச் சுரேஷ் அண்ணாகிட்டச் சொன்னா, அவன் 'அப்படியா...? ரொம்ப நல்லது! அதிலே என்ன தப்பு...? ரவியோட அதிர்ஷ்டத்தைப் பாராட்டுகிறேன்' பான். இந்தப் பிரச்சனையை நீங்க அணுகற விதத்தை அவாளுக்கெல்லாம் புரிய வைக்கறது ரொம்ப சிரமமான காரியம் மாமா! அப்படியே புரிஞ்சாலும் உங்க தரப்பு வாதங்களை இன்னிக்கு நாகரிக உலகத்திலே அவாள்ளாம் ஒத்துக்க மாட்டா..."
"சங்கரமங்கலம் வியாகரண சிரோன்மணி குப்புசாமி சர்மாவோட பேரன் - இப்படி ஒரு வெள்ளைக்காரியைக் கட்டிண்டு வீட்டுக்கு அடங்காமப் போயிட்டானாம்னு நாலு பேர் பேசுவாளே அம்மா...? நம்ப சமஸ்காரம், சம்பிரதாயம் எல்லாத்தையும் விட்டுட்டு அவன் இப்படிச் செய்யலாமா...? நாளைக்கு நானோ அவனோட அம்மாவோ - போயிட்டா எங்களுக்குக் கர்மம் எல்லாம் பண்ண வேண்டிய பிள்ளையாச்சே அவன்?"
இவர்கள் இருவரும் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே "அடடே...யாரு? சர்மாவாளா? வாங்கோ..." என்று கூறிய படியே வேணுமாமா உள்ளே நுழைந்தார். பாரிஸிலிருந்து ரவியின்