Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 10 - நா. பார்த்தசாரதி
ரவிக்கும் கமலிக்கும் வேணுமாமா வீட்டில் நிகழ்ந்த விருந்து முடியும்போது இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். எஸ்டேட் உரிமையாளர் சாரங்கபாணி நாயுடுவிடம் சொல்லி ரவியையும் கமலியையும் மலை மேலுள்ள அவரது பங்களாவில் தங்க அழைக்கும் படி தூண்டியதே வேணு மாமாவும் வசந்தியும் தான். அன்றிரவு இந்த இளம் காதலர்களுக்குச் சுதந்திரமான மகிழ்ச்சியை அளிக்க விரும்பி அவர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்தார்கள். காமாட்சியம்மாளின் கட்டுப்பாடுகளிலிருந்தும் வைதிகமான வீட்டின் கெடுபிடிகளிலிருந்தும் அந்த ஓர் இரவிலாவது அவர்களுக்கு விடுதலை கிடைக்கட்டுமே என்று எண்ணித்தான் இதை அவர்கள் செய்திருந்தார்கள்.
மலை மேல் வேணு மாமாவுக்கே எஸ்டேட் இருந்தாலும் அந்த எஸ்டேட நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாகப் பயணம் செய்ய வேண்டிய தொலைவில் இருந்தது. முப்பது முப்பத்தைந்து மைல் தொலைவில் ஒரு மணி அல்லது ஒன்றரைமணி நேரப் பயணத்தில் செல்கிறாற் போல மிக அருகிலேயே மலையில் இருந்தது நாயுடுவின் எஸ்டேட். அதையும் தவிர நாயுடுவின் எஸ்டேட்டுக்கு நடுவில் இருந்த பங்களாவும் விருந்தினர் விடுதியும் சகல வசதிகளும் உள்ளவையாகவும் பெரியதாகவும் இருந்தன. காரணம், நாயுடு எஸ்டேட்டுக்குள்ளேயே குடும்பத்தோடு வசித்து வந்தார். கீழே கிராமத்தில் வசித்து வந்த காரணத்தால் வேணு மாமா தமது எஸ்டேட்டில் போகிற போது வருகிற போது தங்கிக் கொள்ள ஒரு சிறிய விருந்தினர் விடுதி மட்டுமே கட்டியிருந்தார். அதனால் தான் நாயுடுவின் எஸ்டேட் பங்களாவுக்குக் கமலியும் ரவியும் மற்றவர்களும் அன்றிரவு தங்கச் சென்றிருந்தார்கள். ஒரு காரில் நாயுடு, வேணுமாமா, வசந்தி ஆகியோரும் மற்றொரு காரில் ரவி, கமலி ஆகியோருமாக அவர்கள் சங்கரமங்கலத்திலிருந்து புறப்பட்டிருந்தார்கள். காருக்குள் வீசிய குளிர்ந்த காற்றில் கமலி சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே கண்ணயர்ந்துவிட்டாள். பகலில் நன்றாகத் தூங்கியிருந்ததால் ரவிக்குத்தான் உறக்கம் வரவில்லை. தன் மேலே சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த கமலியின் மேனி நறுமணங்கள் அவன் உள்ளத்தைக் கிளர்ச்சி கொள்ளச் செய்திருந்தன. குடை மல்லிகைப் பூவின் வாசனைக்கும் இளம் பெண்ணின் கூந்தலில் அதை நுகர்வதற்கும் ஏதோ ஒரு கவித்துவம் நிறைந்த இனிய சம்பந்தம் இருக்க வேண்டும் என்று தோன்றியது. சில பூக்களின் வாசனைகள் என்பவை எழுதப்படாத கவிதைகளாயிருந்தன. வார்த்தைகளால் எழுதப்பட்டு விடுகிற கவிதைகளின் அர்த்த வியாபகம் ஓர் எல்லைக்குட்பட்டு விடுகிறது. எழுதப்படாத கவிதைகளின் வார்த்தை வியாபகமும், அர்த்த வியாபகமும் எல்லையற்றவையாக விரிகின்றன. சிறந்த பூக்களின் மனத்தை மயக்கும்