என்று கூட எண்ணினார் சர்மா. தானோ ரவியோ இருவரில் யார் அந்தக் கடிதத்தைப் படித்துச் சொல்ல முயன்றாலும் பொய்யாக இட்டுக்கட்டி ஒரு கடிதத்தை வாசிப்பதாக அவளுக்குச் சந்தேகம் வரும் என்பதால் பார்வதியிடமும் குமாரிடமும் அதைக் கொடுத்தனுப்பினார். "தங்களை நம்பாததோடு அம்மா அதைப் படிக்கத் தொடங்குவதற்குக் கூட விடவில்லை" - என்று திரும்பி வந்து கடிதத்தைக் கொடுத்தார்கள் குமாரும் பார்வதியும். சர்மா தாமே நேரில் போய் மீண்டும் முயற்சி செய்யத் தயங்கினார். கடைசியாக அந்தக் கடிதத்தை வசந்தியிடம் கொடுத்துப் பார்க்க முடிவு செய்தார். ஏற்கனவே ரவியும் கமலியும் ஊரில் இல்லாத போது இந்த விஷயம் காதில் விழுந்ததுமே ஹிஸ்டீரியா வந்தது போல் அழுது கதறிக் கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணியிருந்தாள் காமாட்சி அம்மாள். சொல்லக் கூடாததை எல்லாம் சொல்லியிருந்தாள். கேட்கக் கூடாததை எல்லாம் கேட்டிருந்தாள். ரவியிடமும் கமலியிடமும் சொன்னால் அவர்கள் மனம் வீணில் புண்படுமே என்றுதான் அவற்றையெல்லாம் சர்மா அவர்களிடம் சொல்லாமல் மறைத்திருந்தார்.
காமாட்சியம்மாளுக்கு இரத்தக் கொதிப்பு உண்டு. வீட்டில் அவளைப் பொருட்படுத்தாமல், அவளுடைய அபிப்பிராயத்தை இலட்சியமே செய்யாமல் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தக் கல்யாண ஏற்பாடுகள் அவள் உடல் நிலையையும், மன நிலையையும் பெரிய அளவில் பாதித்திருந்தன. குமாரிடம் சொல்லிக் கயிற்றுக் கட்டிலை எடுத்துக் கூடத்தில் போட்டு மெத்தென்று விரித்துத் தலைக்கு உயரமாக வைத்து அதில் படுத்துக் கொள்ளச் சொல்லியும் கேட்காமல் வேண்டுமென்றே ஈரத் தரையில் புடவைத் தலைப்பை விரித்துப் படுத்துக் கொண்டிருந்தாள் காமாட்சியம்மாள். சரியான அன்ன ஆகாரமின்றித் தளர்ந்தும் போயிருந்தாள். அன்றைக்குச் சாயங்காலம் வசந்தி காமாட்சியம்மாளிடம் பேச வரும் போதும், தானோ, ரவியோ வீட்டில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார் சர்மா. காமாட்சியம்மாள் ஆத்திரப்பட்டுச் சீறினாலும், எரிந்து விழுந்தாலும் பொறுமையிழந்து விடாமல் அவளிடம் தொடர்ந்து பேசி எடுத்துச் சொல்லி விவாதிக்கும்படி வசந்தியிடம் கூறியிருந்தார் அவர். திட்டமிட்டிருந்தபடி மாலையில் சர்மா ஆற்றங்கரைக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். ரவி இறைமுடிமணியைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கலாம் என்று அவருடைய கடைக்குப் போனான். குமார் கல்லூரியில் அடுத்தவாரம் வரப்போகிற ஒரு பரீட்சைக்காகத் திண்ணையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான். பார்வதி உள்ளே வீட்டுக்காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எப்போது பம்பாயிலிருந்து வந்தாலும் மாமிக்கென்று சில சமயங்களில் அவளே பிரியப்பட்டுச்