கணக்குப்பிள்ளை வீட்டில்தான் இருக்கிறாள். கேட்டால் சொல்வாள்" என்று எழுந்தான்.
இது என்ன வம்பாய்ப் போயிற்றே என்று, அவனைத் தடுத்து, "நாங்கள் அதற்காக வரவில்லை. பக்கத்து ஊருக்கு ஒருவர் போனார். அவர் வரும் வரைக்கும் இங்கே காத்திருப்போம்" என்றேன். அப்போதும் அவன் போகவில்லை.
"அப்படியா?" என்று மறுபடியும் எங்களோடு உட்கார்ந்தான்.
"அந்த அம்மா யார்?" என்றேன்.
"அவளுடைய வீட்டுக்காரன் இப்போது இங்கே இல்லை. ஒரு கொலை செய்துவிட்டுப் பத்து வருசம் சிறையில் கிடக்கின்றான்."
இதற்குமேல் அவனைப் பேசவிட்டால் தொல்லையாய்ப் போய்விடும் என்று அஞ்சினேன். ஆயினும், "யாரைக் கொலை செய்துவிட்டான்?" என்று கேட்டேன். அந்த அம்மா நெருங்கி வந்தபோது கவனித்தேன். கட்டான முரட்டு உடலோடு தேநீர்க் கடையில் இருந்தவன் சொன்ன பொருத்தங்களோடு இருந்ததைக் கவனித்தேன். இப்படிப் பட்டவளை நாடும் அளவிற்குச் சந்திரனுடைய மனம் கெட்டுவிட்டதே என்று வருந்தினேன்.
"அவனோடு கூடவே இருந்தான் ஒருத்தன். தோட்டத்தில் வேலை செய்து வந்தவன்தான். ஒருநாள் இரவில் குடித்துவிட்டு, இதே ஆலமரத்தடியில்தான் இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள். குடிவெறியில் அறிவு இல்லாமல் வெட்டிப் போட்டுவிட்டான்" என்றான் அந்தப் பையன்.
அவனைப் பற்றி ஏதாவது கேட்கலாம் என்று விரும்பினேன். சாமண்ணா இருப்பதால், அவருக்குக் கூடிய வரையில் உண்மை தெரியாமல் இருக்கட்டும் என்று எண்ணித் தடுத்துக் கொண்டேன்.
நல்ல காலமாக, அப்போது வேறொரு பையன் வரவே அவன் சொல்லாமலே எழுந்துபோய் அவனோடு சேர்ந்து அவனுடைய தோள்மேல் கை போட்டுக்கொண்டு நகர்ந்தான்.