"அதோ கணக்குப்பிள்ளை வருவதுபோல் தெரியுதே", "இன்றைக்குப் பொழுதோடு வந்துவிட்டாற் போல் தெரியுதே", "தாயம்மாவுக்கு இன்றைக்குப் பலம்தான். பொட்டலம் நிறைய வரும்" என்று இப்படிச் சில குரல்கள் அந்தப் பெண்களிடையே கேட்டதும், நான் உணர்ந்து பின்வாங்கி ஆலமரத்தடிக்குப் போய் விட்டேன்.
"அதோ சந்திரன் போல் இருக்கிறதே" என்றார் ஆசிரியர்.
உடனே சாமண்ணா எழுந்து நின்றார். அவருடைய கைகளும் உதடுகளும் துடித்தன. "பேசாமல் இருங்கள். மூச்சு விடாதீர்கள். கூப்பிடக்கூடாது. காரியம் கெட்டுப் போகும்" என்று அமைதிப் படுத்தினேன். "கடவுளே கடவுளே" என்று வாயோடு சொல்லிக்கொண்டார். நாங்கள் சந்திரனுடைய கண்ணில் படாதபடி மரத்தின் அந்தப் பக்கமாக ஒதுங்கி நின்றோம்.
சந்திரனுடைய நடை நன்றாகத் தெரிந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்னென்ன மாறுதல்கள் நேர்ந்தாலும் ஒருவருடைய நடைமட்டும் அப்படியே இருக்கிறது. அவனுக்குப் பின் இரண்டு பேர் மூட்டைகளுடன் நடந்து வந்தார்கள். அவனுடைய இரண்டு கைகளிலும் இரண்டு பை நிறையப் பொருள்கள் இருந்தன. சாமண்ணா எப்படியோ அவற்றைக் கவனித்துவிட்டார். "தெய்வமே இவனுக்கு ஏன் இந்தத் தலைவிதி! இவன் இட்ட வேலையைச் செய்ய ஆட்கள் காத்திருக்கிறார்களே! வேலைக்காரன் போல் இரண்டு கைகளிலும் எடுத்துச் சுமந்து வருகிறானே!" என்று வருந்தினார்.
சந்திரனும் பின்வந்த ஆட்களும் வீடுகளை நெருங்கிய பிறகு நான் மெல்ல நகர்ந்து தெருப்பக்கமாகத் தொலைவில் நின்று பார்த்தேன். அந்தப் பைகளை அவள் கை நீட்டி வாங்கியது தெரிந்தது. அவன் வீட்டினுள் நுழைந்தான். உள்ளே விளக்கு எரிந்தது. அணுகிச் சென்றேன். அவனுடைய குரல் நன்றாகக் கேட்டது. குரலில் ஒன்றும் மாறுதல் இல்லை. பதினைந்து மாதங்களில் மாறுதல் ஏற்பட்டிருக்க முடியாது என்று உணர்ந்தேன். அவனும் அவளும் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் நுழைந்தாள். முன்பார்த்த அந்தப் பெண்தான் என்று உணர்ந்தேன். அந்தப் பெண்ணின் கையில் இருந்த பையைத் தாயம்மா பெற்றுக்கொண்டு அவளுடைய கன்னத்தைத் தடவிக் கூந்தலை நீவுவதைக் கண்டேன். பெண்ணின் கையில் ஏதோ கொடுத்ததும் தெரிந்தது. பிறகு அவள் எதையோ எடுத்துக் கடித்துத் தின்றதைக்