எனக்குப் பசி எடுத்தது. ஆசிரியரிடம் சொன்னேன். தேநீர்க் கடைக்காவது போய் ஏதாவது சாப்பிட்டு வரலாமா என்று கேட்டேன். "இப்போது ஒன்றும் வேண்டா. வந்த வேலையை முடித்துக்கொண்டு போனால் போதும்" என்றார் சாமண்ணா. ஆசிரியர் தம் பையிலிருந்த பிஸ்கட் சுருள் ஒன்றைப் பிரித்தார். அதனால் சிறிது பசி ஆறினேன்.
விளக்கு வைக்கும் நேரம் ஆயிற்று. சந்தைக்குப் போன மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். எங்கள் பார்வை அவர்களிடையே ஊடுருவிச் சென்று தேடியது. அதற்குள் கொலைகாரனுடைய மனைவி எங்கள் பக்கமாக ஒற்றையடிப் பாதையில் நடந்து எங்களைக் கடந்து நேராகச் சென்றாள். அவளுடைய முகத்தை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவளுடைய பண்புகள் எப்படி இருந்த போதிலும், அடர்ந்த புருவங்களிலும் அகன்ற கூரிய விழிகளிலும் ஒரு தனி அழகு இருக்கக் கண்டேன். கொடியவர்கள், பொல்லாதவர்கள் என்று பழிக்கப்படுவோரும் இருபத்து நான்கு மணி நேரமும் கொடுமையோடு இருப்பதில்லை; இருக்க முடியாது என்பது மனித இயற்கை. அவர்களின் உள்ளத்திலும் ஈரம் உண்டு; குழைவு உண்டு. அப்படிக் குழைந்த நெஞ்சோடு அவள் பழகிய நேரத்தில் சந்திரன் தன் உள்ளத்தைப் பறிகொடுத்திருப்பான் என்று எண்ணினேன்.
அவ்வாறு எண்ணிக் கொண்டிருந்தபோது அவள் மறுபடியும் அந்தப் பக்கம் வந்தாள். அப்போது அவளுடன் ஒரு சிறு பெண்ணும் வந்தாள். "என் கண் அல்லவா? போய் வா அம்மா, மாமா சந்தையிலிருந்து வந்ததும் உனக்கு முறுக்கும் பொரிகடலையும் தருவேன், போய் நான் சொன்னேன் என்று வாங்கி வா, பொழுது போய்விட்டது சீக்கிரம் வா" என்று அந்தப் பெண்ணை வேண்டிக் கொண்டே சென்றாள். நான் எதிர்பார்த்த குழைவும் இனிமையும் நயமும் அவளுடைய அந்தப் பேச்சில் இருந்ததைக் கண்டேன். சந்திரன் பிடிவாதம் செய்தால் அவன் அவளைத் தன்னோடு அழைத்துக்கொண்டே ஊருக்கு வந்து விட்டாலும் நல்லது தான் என்று என் மனம் எண்ணியது.
அவள் சென்றவுடன், நான் மெல்ல எழுந்து தொலைவில் ஒரு பக்கமாக நின்று, நடப்பது என்ன என்று பார்த்தேன். அந்த மூன்றாம் வீட்டைத் திறந்து ஒரு பையும் காசும் கொடுத்து அந்தப் பெண்ணைக் கடைக்கு அனுப்பியதைக் கண்டேன். அப்போது பக்கத்து வீட்டுக்காரப் பெண்கள் சந்தையிலிருந்து வந்துவிடவே, அவர்களோடு பேசிக்கொண்டு கலகலப்பாக இருந்தாள்.