"நீங்கள் அந்தப் பெண் கமலாவைக் கல்யாணம் செய்து கொண்டுவிட்டால் அவர்கள் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும்."
"என்ன விளையாடுகிறீர்கள்?"
"விளையாட்டு என்ன வந்தது? உங்களுக்கோ இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அந்தப் பெண்ணோ கஷ்டப்படுகிறாள். ஒவ்வொரு சமயம் அந்த அம்மாள் கமலாவை நடத்துவதைப் பார்த்தால் சொந்தத் தாய் இல்லையோ, மாற்றாந் தாயோ என்றுகூடத் தோன்றுகிறது."
"நானும் அப்படி நினைத்ததுண்டு. ஆனால் தரித்திரத்தின் கொடுமைதான் அப்படியெல்லாம் பேசச் சொல்கிறது என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்."
"ஏதாவது இருக்கட்டும். நான் சொன்ன படி நீங்கள் செய்தால் நல்லது. கமலாவும் ரொம்ப நல்ல பெண். கண்ணுக்கு லட்சணமாய் இருக்கிறாள். உங்கள் தாயாருக்கும் அதிகமாகப் படிக்காத, குடும்பப் பாங்கான பெண் தான் நாட்டுப் பெண்ணாக வரவேண்டும் என்று ஆசை. போதாக்குறைக்கு அவளை நீங்கள் கிணற்றிலிருந்து எடுத்துக் காப்பாற்றியிருக்கிறீர்கள்!"
"அதனாலே என்ன? ஒரு பெண்ணைக் கிணற்றிலிருந்து எடுத்துக் காப்பாற்றிய குற்றத்துக்காக நான் கழுத்திலே கல்லைக் கட்டிக் கொண்டு கடலிலே விழ வேண்டுமா?"
"சேச்சே! அப்படிச் சொல்வேனா? 'சம்சார சாகரத்தில் கமலாவுடன் கரம் கோத்துக்கொண்டு இறங்குங்கள்' என்றுதான் சொல்கிறேன்."
"இதோ பாருங்கள்! கமலா வேணுமானால் மறுபடியும் என் எதிரேயே கிணற்றில் விழட்டும். நான் காப்பாற்றாமல் கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறேன். ஏதோ மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டதற்காக எனக்கு இத்தனை பெரிய தண்டனையைக் கொடுக்காதீர்கள்!"
"கல்யாணம் என்றால் உங்களுக்கு அவ்வளவு வெறுப்பா? எனக்குத் தெரியாமல் போச்சே. எனக்கும் கல்யாணத்தின் பேரில் வெறுப்புத்தான்!"