"என்னது? உங்களுக்கு என் மேலே வெறுப்பா?" என்றான் கல்யாணம் பொய்க் கோபத்துடன்.
பவானி சிரித்தாள். "இல்லை, இல்லை! உங்களைப் போலவே எனக்கும் திருமணத்தின் மீது வெறுப்பு' என்று சொல்லி இருக்க வேண்டும்."
"உங்கள் நிலைமை எப்படியோ, எனக்கொன்றும் திருமணத்தின் மீது வெறுப்பில்லை. என் பெயரே கல்யாணம் என்றிருக்கும்போது தாலி கட்டத் தயங்குவேனா? என் மனசுக்கு உகந்த பெண்ணாயிருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நியாயமான நிபந்தனைதான்.... உதாரணமாய் நாம் இரண்டுபேரும்தான் இருக்கிறோம்.... சும்மா ஓர் உதாரணத்துக்கு..... பேச்சுக்குச் சொல்கிறேன்."
"பேச்சுக்குக்கூடச் சொல்ல வேண்டாம். எனக்குக் கல்யாணம் என்றால் ரொம்ப வெறுப்பு. அதை மறக்காதீர்கள்" என்றாள் பவானி.
கல்யாணம் அவள் குரலில் எட்டிப்பார்த்த கடுமையைப் புரிந்து கொண்டு மௌனமானான். இதற்குள் அவன் வீடு வந்து விட்டது. கதவைத் திறந்து கொண்டு இறங்கப் போனவனை, "மிஸ்டர் கல்யாணம்" என்ற கனிவான அழைப்பு தடுத்து நிறுத்தியது.
"என்ன சொல்லுங்கள்!"
"கமலா கிணற்றில் விழுந்தாளே, எப்படி?"
"தாம்புக் கயிறு ஜகடையில் சிக்கிக் கொண்டதாயும் அதை விடுவிக்கக் கிணற்று மதில் மீது தான் ஏறியதாகவும் தடுமாறி விழுந்ததாகவும் சொன்னாள்."
"சுத்தப் பொய்!"
"என்னது!"