அப்படியில்லை பவானி, என்னைப் பற்றி நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாயோ என்று எனக்கு ஒரே கவலை. இந்த நாலு ஆண்டுகளும் அதே சிந்தனை!"
"என்ன எண்ணினேன்? தேச பக்த தியாகி என்று பெருமைப்பட்டேன். படிப்பையும் பட்டத்தையும் தொடர்ந்து கிடைக்கக்கூடிய பெரிய உத்தியோகத்தையும் துரும்பாக மதித்து உதறிவிட்டுப் போன வீரர் என்று நினைத்து நினைத்துப் பூரித்தேன். என்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லிக் கொள்ளாமல் என்னை விட்டுப் பிரிந்து போனது எனக்கு ஒரே கோபமாகவும் வருத்தமாகவும் இருந்தாலும் அதே சமயம் என்னிடம் சொல்லியிருந்தால் நான் உங்களைத் தடுத்திருக்க மாட்டேனா என்றும் எண்ணிப் பார்த்தேன். எனவே என்னிடம் சொல்லாமலே நீங்கள் சுதந்திர தேவிக்குப் பணிவிடை செய்ததும் நியாயமே என்ற முடிவுக்கு வந்தேன். கடமைக்காகக் காதலையும் துறந்த உங்கள் திட சித்தம் என் னைப் புளகாங்கிதம் அடையச் செய்தது. நீங்கள் விடுதலை பெற்றுத் திரும்பி வரும்தினத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டு பொறுமையோடும் ஆவலோடும் காத்திருந்தேன்."
பவானி பேசப் பேச உமாகாந்த் முகத்தில் ஏதோ புதிரை விடுவிக்க முடியாத பாவம் படர்ந்தது!
"பவானி! தேச பக்தத் தியாகியாக நான் சிறைசென்றதை யார் உனக்குச் சொன்னது?"
"வேறு யார்? உங்கள் தகப்பனார்தான்!" என்றாள் பவானி. "நீங்கள் கல்லூரிக்குச் சில நாட்கள் வராமலிருக்கவே என்னால தாங்கிக்கொள்ள முடியவில்லை. கூச்சத்தை விட்டு உங்கள் வீட்டில் என்னை யாராவது தப்பாக நினைத்துக் கொண்டாலும் பாதகமில்லை என்ற தீர்மானத்துடன் போய் விசாரித்தேன். உங்கள் தகப்பனார் அன்பொழுக என்னிடம் பேசினார். 'உன் கல்லூரி நண்பர்கள் எல்லாருமே பெருமைப்படக் கூடிய விஷயத்தைச் சொல்லப் போகிறேன்' என்று ஆரம்பித்து நீங்கள் கைதான விஷயத்தைச் சொன்னார். குடும்பத்தினரில் கூட யாருக்குமே தெரியாமல் நீங்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சில சதிச் செயல்களில் ஈடுபட்டிருந்தீர்களாமே! அண்டர்கிரவுண்ட் பேர்வழிகள் சிலருக்கு உதவினீர்களாமே! ஸி.ஐ.டி.கள் அதைத் தெரிந்து கொண்டு உங்களை அரெஸ்ட் செய்து ஓர் ஆங்கிலேய மாஜிஸ்டிரேட் முன் கொண்டுபோய் நிறுத்தினார்களாம். அவன் ஒரேயடியாக ஆறு ஆண்டுகள் தீட்டி விட்டான். 'அப்பீல்' செய்திருந்தால் தண்டனை குறைந்திருக்கும். ஆனால் நீங்கள் மேல் கோர்ட்டுக்குப் போவது தேச பக்தனுக்கு இழுக்கு என்று கூறிவிட்டீர்கள். எத்தனை வருஷங்களானாலும்