தண்டனையை இன்முகத்துடன் ஏற்பேன் என்று அடித்துச் சொன்னீர்கள். இதையெல்லாம் விவரித்தபோது உங்கள் அப்பா கருணாகரன் கண் கலங்கி விட்டார்!"
புதிர் நீங்கிய பாவத்தில் புன்னகை மலர்ந்தது உமாகாந்தின் முகத்தில். நிம்மதி பெற்றவனாகக் கண்களை மூடிக் கொண்டான். அவன் நெற்றியை இலேசாக வருடினாள் பவானி. "எவ்வளவோ கேட்க வேண்டும்; எத்தனையோ பேச வேண்டும்" என்றான். "இப்போது என்ன அவசரம்? மெல்லப் பேசலாம்; ஓய்வாக இருங்கள்" என்று அவன் புருவங்கள் மீதாக ஒரு விரலால் கோடு இழுத்தாள். அவன் தூங்கிவிட்டதாக எண்ணி நெற்றியில் இதழ் பதித்தாள்.
"அவ்வளவுதானா? கன்னத்தில் ஒன்று?"
"அதற்கு இன்னும் சிறிது காலம் காத்திதிருக்க வேண்டும் நீங்கள்! முதலில் இந்த எட்டு நாள் தாடியை வழித்தெடுங்கள்! கிட்ட நெருங்க விடேன் என்கிறது" என்று கூறிச் சிரித்தாள் பவானி.
மாறாத புன்னகையுடன் கண்ணயர்ந்தான் உமாகாந்தன்.
'என்னதானிருந்தாலும் என்னிடம் மட்டுமாவது உங்கள் ரகசிய நடவடிக்கைகளை விவரித்திருக்கலாம்' என்று அவன் முகத்தைப் பார்த்தவாறே தனக்குத் தானே பேசிக் கொண்டாள் பவானி. 'எந்தச் சிறையில் இருக்கிறீர்கள் என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்று உங்களைப் பார்க்க வந்திருக்க மாட்டேனா? யாரும் உங்களைச் சிறையில் வந்து பார்க்கக் கூடாது என்று கூறி விட்டீர்களாம். அப்படி வந்தால் உங்கள் மன உறுதி தளர்ந்துவிடும் என்று அஞ்சினீர்களாம். எனவே உங்கள் அப்பா நீங்கள் சிறைப் பட்டிருக்கும் ஊரைக் கூற மறுத்துவிட்டார். உங்கள் கோரிக்கைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியவளானேன் நான். நீங்கள் அடைந்து கிடக்கும் சிறைச்சாலை எது என்று கண்டுபிடிக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஒரு கடிதமாவது நீங்கள் எனக்குப் போட்டிருக்கக் கூடாதா? அப்போது நீங்கள் இருக்குமிடம் எனக்குத் தெரிந்து போய்விடுமே என்றா?
'ஆனால் அப்படிப்பட்ட கடுமையான தவத்தை மேற்கொண்ட நீங்கள், பிறகு அத்தவத்தைக் காப்பாற்ற முடியாமல் தண்டனைக் காலம் முடியு முன்னரே சிறையிலிருந்து தப்பி ஓடி