நோயாய்ப் படுத்த பிறகு அவள் உள்ளே போய் படுப்பதில்லை. தாபத்தீயினால் உடலைப் பொசுக்கிக் கொள்வதில்லை.
பூரணி மட்டும் இவளிடம் ரகசியமாகக் கேட்டாள்.
"இப்படியே உங்காலத்தை ஓட்டப்போறியா?"
"பின்னே''
"ரொம்ப கஷ்டம். வாழ்ந்து அனுபவிச்சவாளாலேயே முடியாது".
''முடியத்தான் இல்லே. அதுவும் அந்த மனுஷன் அடிக்கடி ஞாபகப்படுத்தி விடறார்; தன் இயலாமையைச் சொல்லிச் சொல்லி".
''பாவம் பேசாம இருந்திருக்கலாம்"
''உம். இப்படி எத்தனையோ பேர் ஏமாந்திருப்பா. அதுலே நானும் ஒருத்தி. இல்லை ரகசியமா யாரோடயாவது நேகம் வச்சிண்டிருப்பா"
பூரணி பல்லைக்கடித்தபடி சொன்னாள்.
"அப்படித்தாண்டி செய்யணும். இவன் என்ன பண்ணிப் பிடுவான்."
இருவரும் மாலை மங்குகிற நேரத்தில் கிணற்றங்கரையில் பேசிக்கொண்டிருந்ததை பட்டப்பா கேட்டுக் கொண்டு வந்தான்.
"உண்மைதான். அவள் எப்படி நடந்துக்கொண்டாலும் கேட்பதற்கு எனக்கு என்ன அதிகாரம் இருக்கு. அவ பாலு வோட சிநேகமா இருக்கலாம். ஊரிலிருக்கிற சாயிராமோட வும் இருக்கலாம். தப்பே கிடையாது. மனைவி பிரசவத்துக்குப் போயிருந்தால் ஊர் மேயும் ஆண்கள் கூட்டத்தை மன்னிக்கும் சமூகம், இதைக் கேட்டால் அலறித்துடிக்கும்.