Flexi Classics தொடர்கதை - அவள் விழித்திருந்தாள் - 15 - சரோஜா ராமமூர்த்தி
சொத்துக்களைப் பற்றிய ஏற்பாடுகளைச் செய்து முடிக்க ஒரு மாதத்துக்கு மேல் ஆயிற்று. இன்னொரு கடிதம் வராதா என்று எதிர்ப்பார்த்தாள். ஏமாந்தாள். ஒன்றும் தகவல் இல்லை.' இந்த மட்டும் தற்கொலையில் இறங்காமல் உசிரோட இருக்கேன் என்று கடுதாசி போட்டாரே' என்று சந்தோஷப் பட்டாள் நர்மதா.
வெங்குலட்சுமிக்குக் காசிக்குப் போகப் போகிறோம் என்றவுடன் உற்சாகம் பீறிட்டுக் கொண்டு கிளம்பியது. அங்கே சமைத்துச் சாப்பிட அது இது என்று நாலைந்து டப்பாக்களை நிறப்பிக் கொண்டாள், சிலருக்கு அதிக துக்கம் ஏற்பட்டு விட்டால் மனசு கல்லுப்பட்டுப் போய்விடுமாம்.
நாரத்தங்காயிலிருந்து சுண்டைக்காய் வரை எடுத்து வைத்தாள். நர்மதா சுத்தமாக எல்லா நகைகளையும் கழற்றி பாங்க்கின் பாதுகாப்பில் வைத்தாள். திருமாங்கல்யச் சரடு, கண்ணாடி வளையல்கள், ஒற்றை மூக்குத்தி, தோடுகள், நாலு நூல் புடவைகள்.
"என்னடி வேஷம் இது? அவன் எங்கேயாவது நன்னா இருக்க வேண்டாமோ?"
"இதோ" என்று திருமாங்கல்யத்தைக் காண்பித்தாள்.
"நன்னா இருக்கு! பளிச்சுனு இருந்தாத் தான் நாலு பேர் மதிப்பா. போற இடத்திலும் மதிப்பு கிடைக்கும். "
அம்மாவோட என்ன தர்க்கம் வேண்டியிருக்கு. அவ மனசு அப்படி என்று அவள் அதிகம் பேசவில்லை.
"இரண்டு நாள் என்னோடு இரேன்" என்று பூரணி கூப்பிட்டாள்.
"உன்னை மறந்துடவா போறேன், எல்லாத்தையும் கவனிச்சுக்கோ... தேங்காய் பறிச்சுக்கோ... ஒரு நல்ல நாளாப் பார்த்துண்டு இந்த வீட்டுக்கு வந்துடுங்கோ. கங்கம்மா குழந்தைகளுக்கு ஆசைபட்டாள். ஒங் குழந்தைகள் தான் ஓடி விளையாடட்டுமே வேணா இன்னும் இரண்டு பெத்துக்கறது..." என்று கிண்டல் பண்ணினாள்.