Flexi Classics தொடர்கதை - அவள் விழித்திருந்தாள் - 14 - சரோஜா ராமமூர்த்தி
பொழுது விடிந்தது. பொழுது போயிற்று. இப்படியே மாதங்கள் ஓடின. இருவருக்கும் இடைவெளி அகலமாகிக் கொண்டிருந்தது. நர்மதா தன்னை விட்டுப் போய் விட வேண்டும். அவள் இஷ்டம் போல அவளுடைய யெளனவத்தையும், அழகையும் வைத்துக்கொண்டு ஜம்மென்று வாழலாம். ஏனிப்படி இந்த வீட்டில் நடைப் பிணமாக உலாவி வருகிறாள் என்பது அவனுக்கே புரியவில்லை.
ஒரு நாள் சாப்பிடும் போது சொன்னான், ''உன் பேரிலே ரொக்கமா ஐம்பதினாயிரம் பாங்கில் போட்டிருக்கிறேன். ஊர்க்கோடி தென்னந்தோப்பை வித்தாச்சு.'
அவள் ஒன்றும் பேசவில்லை.
"நான் பண்ணினது சரிதானே?"
"தெரியலையே... நான் எப்படி இந்தச் சொத்தை அனுபவிக்கலாம்?"
'"ஏன்? நான் உனக்குப் பண்ணிய துரோகத்துக்குப் பணத்தைக் கொடுத்து ஈடுகட்ட முடியுமா? என்னவோ தோணித்து உன் இஷ்டம் போல அதிலே வர வட்டியை வச்சுண்டு இருக்கலாம்."
"என்னை எங்கே போகச் சொல்றீங்க?" அவள் கண்கள் கலங்கின.
"இஷ்டப்படி எங்கே வேணுமானாலும் போயிட்டு வரலாம். இப்படி எங்கிட்டே அடிமையா இருக்கணும் நீ என்று நான் எதிர்ப்பார்க்கலை. உனக்குன்னு எத்தனையே ஆசைகள் இருக்குமே”
"எனக்குப் பொதுவா ஆம்பிள்ளைகளைக் கண்டாலே பிடிக்கலை"
"பாலுவை? சாயிராமை?"
"பாலுவையா? பொண்டாட்டியை ஏமாத்தறவனையா? அவனைப் பிடிக்கறதா?"
''சாயிராம்?'