நர்மதா பேசாமல் இருந்தாள். பட்டப்பா கை அலம்பிக் கொண்டு அவள் அருகாமையில் வந்தான். "நீ கல்யாணத்துக்கு முன்னே அவனைக் காதலிச்சே. அது உன் மனசில் புகைஞ்சுண்டே இருக்கு. ஊருக்குப் போனா எங்கேயாவது அவன் கிட்டே ஏமாந்துடப் போறோம்னு பயப்படறே. அதான் போக மாட்டேங்கறே.'
அவள் தன் எதிரில் இருந்த சுவரைப் பார்த்தபடி நின்றாள்.
வாஸ்தவம் தானே? சாயிராம் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அவளுக்குள் ஒரு சந்தோஷம் ஏற்பட்டிருக்கிறது. அவன் அவள் அழகை வர்ணித்த போதெல்லாம் அவள் மகிழ்ந்து போயிருக்கிறாள். அதற்கெல்லாம் ஒரு வடிவம் கொடுப்பதற்கு முன்பே அம்மா இந்தக் கல்யாணத்தை நிச்சயம் பண்ணிக் கொண்டு வந்து விட்டாள். சொப்பனம் போல கல்யாணமும் நடந்து விட்டது. 'நான் சொல்கிறது உண்மைதானே?" என்று தூண்டித் துருவிக் கேட்டான் அவன்.
"ஆமாம் அவர் மேலே எனக்கு ஆசை இருந்தது. ஆனா. உங்களைக் கல்யாணம் பண்ணிண்ட அப்புறம் அதைப் பத்தி நினைக்கலை. நான் மறந்தே போயிட்டேன். அவர் இங்கே ஒரு தரம் வந்தப்ப கூட என் மனசிலே ஒன்றும் விகல்பமா ஆசை எழலை. எப்படியோ என் தலை எழுத்து இப்படியாயிடுத்துன்னு விரக்தி பண்ணிண்டாச்சு. திரும்பத் திரும்ப என் சரீர இச்சையைப் பத்தியே பேசிண்டிருக்கீங்க. எனக்குன்னு ஒரு சுத்தமான மனசு இருக்காதா? இருக்கக் கூடாதா? உலகத்துலே எத்தனையோ வித பசிகள் இருக்கு. அந்த மாதிரி உடற்பசியும் ஒண்ணு. இன விருத்திக்காக மிருகங்கள், மற்ற ஜீவன்களைப் போலத்தான் மனுஷன் பெண்ணை நாடிப்போகிறான். இதுக்குப் போய் இத்தனை கவலையும், குழப்பமும் ஏற்படுவானேன்?"
அவளை வியப்புடன் பார்த்தான் பட்டப்பா. வேடிக்கையான பெண். அதுவும் இந்தக் காலத்தில் தெருத்தெருவாய் கண்டபடி சினிமா போஸடர்கள் சீரழியும் இந்த நாட்களில் இப்படியும் ஒருத்தி!
"அப்ப என்ன தான் பண்ணப் போறே?"