Flexi Classics தொடர்கதை - அவள் விழித்திருந்தாள் - 13 - சரோஜா ராமமூர்த்தி
கணவனும், மனைவியும் கருத்தொருமித்து வாழ்வதுதான் இல்லறம். அந்த வீட்டில் கருத்து ஒருமிப்பதற்கு இடமே இல்லை. நர்மதாவும், பட்டப்பாவும் வட துருவமும், தென் துருவமுமாக இருந்தார்கள். சரீர இச்சையைக் கடந்துவிட்ட ஞானி என்று சொல்லமுடியாது. அந்த ஏக்கம் அவளைத் தின்று கொண்டேயிருந்தது. மனைவி ரகசியத்தில் எப்படியோ இருந்துட்டுப் போகட்டும். அது ஒன்றும் தன்னை பாதிக்காது. ஊர் உலகத்தின் முன்னால் கணவன் மனைவியாக வாழவேண்டும்.
இப்படியொரு போலித்தனம். அவள் வர வர எதிலுமே பிடிப்பற்றுப் போனாள். தலை சீவிக்கொள்வதில்லை. சரியாகச் சாப்பிடுவதில்லை. சில நாட்கள் ஊஞ்சலில் படுத்திருப்பாள். சில நாட்கள் சமயலறை வாசற்படியில் படுத்துத் தூங்கி விடுவாள். உள்ளே கட்டிலில் அவர்களுக்காக கங்கம்மா தைத்து வைத்த மெத்தை தூசு படிந்து கொண்டிருந்தது.
அந்த அறைக்குள் அவள் போவதில்லை. போனால் தானே பக்கத்து வீட்டு மாடியைப் பார்க்க வேண்டியிருக்கிறது? பூரணியும், பாலுவும் ஏகாந்தமாக இருப்பதும் கண்ணில் படுகிறது. அந்தப் பக்கத்து ஐன்னலை அறைந்து மூடினாள்.
இந்தத் தடவை பூரணி இரண்டாவது பிரசவத்துக்கு ஏழு மாசங்கள் கழித்துப் பிறந்த வீட்டுக்குக் கிளம்பினாள். போகும் முன் நர்மதாவைத் தேடி வந்தாள் அவள்.
"இங்கேயே இரேன் பூரணி அக்கா! நான் பிரசவத்துக்கு செய்யமாட்டேனா?" என்றாள் நர்மதா.
"அதெல்லாம் முடியாது நர்மதா. அம்மா இல்லாமல் என்னால் தைரியமா இருக்க முடியலை. நான் போயிட்டு வரேன். எதுக்கும் நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் எங்க வீட்டுக்குப் போக வேண்டாம்."
ஏன்?”
'காரணம் உனக்கே தெரியும். நான் சொல்லணுமா?"
நர்மதா தலை குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள். பூரணி அரை மனசோடு போகிறாள் என்பதும்