"இப்படியே இருக்கிறது. என்னைப் போல கல்யாணம் ஆன பெண்கள் சவரணையா இருந்தா மூணு குழந்தைகள் பெத்துண்டு இருப்பா. அதுகளுக்கு வியாதி வரும். டாக்டர் வீட்டுக்குப் போவாள் கணவன் தன்னை நெருங்கி வரும் போதெல்லாம் தன் மூணு குழந்தைகளைக் காட்டிக் காட்டி விலகிப் போயிண்டு இருப்பா. அவன் அடுத்த வீட்டிலே எதிர் வீட்டிலே யாராவது கிடைப்பாளான்னு பார்த்திண்டிருப்பான். இப்போ எனக்கு இந்தச் சள்ளையெல்லாம் இல்லை." அவள் பளிச்சென்று சிரித்தாள்.
"நீ இப்படி இருக்கிறது எனக்கு சங்கடமா இருக்கே."
"எப்படி இருக்கிறது? நன்னாத்தானே பளிச்சுனு இருக்கேன்?”
"அதான் என் மனசைச் சங்கடப்படுத்தறது; இத்தனை அழகும் வீணாப் போறதேன்னு. "
"அழகு எப்படி வீணாப்போகும்? அது பால்யத்திலே ஒரு தினுசா சரீரக் கவர்ச்சியோட இருக்கும். நடுத்தர வயசில் தாய்மையாகப் பிரகாசிக்கும். வயசானப்புறம் அனுபவமா முதிர்ந்து போகும். எல்லா வயசிலும் அழகு நிலையாத்தான் இருக்கும். உங்கக்கா கங்கம்மா நன்னா அழகாத் தான் இருந்தா வியாதி வந்து படுத்துண்டப்புறமும் நன்னாத்தான் இருந்தா. பொணமானப்புறமும் பளிச்சுன்னு இருந்தா. அழகுங்கறது மனசிலே இருக்கு. "
பட்டப்பா அவளுடன் வாக்குவாதம் புரிவதை நிறுத்திக் கொண்டான். இவள் தன்னைவிட்டு அகலமாட்டாள் என்பது திடமாகப் புரிந்தது. இனி தான் தான் இவளை விட்டுப் போக வேண்டும். அவள் புத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். கணவனுக்கு எதிரில் தன்னை ஒரு பதிவிரதையாக. மகத்தானவளாக, ஒழுக்கமுள்ளவளாக இன்னும் எப்படியெல்லாமோ இருக்க ஆசைபடுகிற ஜன்மம் அவன் அந்த வீட்டில் இருக்கிற வரையில் நர்மதா தனக்குள் கருகித் தீய்ந்து தான் போவாள் என்பது அவனுக்குத் தெரிந்து போயிற்று.
வழக்கம் போல ஒரு நாள் காலையில் காப்பி சாப்பிட்டு ஊஞ்சலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தவன் வட இந்திய யாத்திரை ஸ்பெஷல் ஒன்றைப் பற்றிப் படித்தான்.