"பெத்துக்க வேண்டியது தான்!"
"பாரேன். நான் திரும்பி வரச்சே உனக்கு நாலுக்கு மேலே இருக்கப் போறது!"
“போடி..."
பூரணி சிரிக்கவில்லை. துயரம் தாங்காமல் நர்மதாவைக் கட்டிக்கொண்டாள்.
கிளம்புகிறதற்கு முதல்நாள் வரையில் நர்மதா அம்மா கட்டி வைத்திருக்கும் மூட்டை முடிச்சுகளைக் கவனிக்கவில்லை. நாலைந்து தகரடப்பாக்கள். நார்மடிக் கூடை. பெட்டி வேறே.
"பெட்டியிலே என்னம்மா?”
‘ஒனக்கு நாலு பட்டுப் புடவை எடுத்து வச்சிருக்கேன்.”
"போருமே. எல்லாத்தையும் எடுத்து உள்ளே வை. இல்லைன்னா யாரையாவது கூப்பிட்டுக் குடுத்துடுவேன்."
கிழவி முணு முணுத்துக் கொண்டே எடுத்து வைத்தாள்.
கங்கா காவேரியில் ஜன்னல் ஓரம் உட்கார்ந்திருந்த நர்மதா வெகு நேரம் வரையில் பேசவில்லை. ரயில் கிருஷ்ணா நதியைத் தாண்டி, விரைந்து கொண்டிருந்தது பொங்கித் தளும்பி பிரவகிக்கும் தண்ணீரைக் கண் கொட்டாமல் பார்த்தாள். எத்தனை பேருடைய தாபத்தை. பாபத்தை இந்தப் புனித நதி போக்கியிருக்கும்? ரயிலின் ஓரமாக மலைகள் வந்தன. சமவெளி வந்தது. அடர்ந்த காடுகள் வந்தன. தரிசு நிலங்கள் வந்தன. அடர்ந்த காடுகள் வந்தன. தரிசு நிலங்கள் வந்தன. இரவில் சந்திரிகை பிரகாசித்தது.
அவள் தன்னிடமிருந்து ஒரு பாரம் குறைவதை உணர்ந்தாள்.
வானத்து நிலவு தாவள்யமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.