(Reading time: 6 - 12 minutes)
Muthu Sippi
Muthu Sippi

  

நாகராஜன் பதில் ஒன்றும் கூறவில்லை . அவன் உள்ளத்தில் எத்தனையோ கேள்விகளும் பதில்களும் எழுந்தன. அவைகளை அடக்கிக் கொண்டு, அப்படியானால் இந்த மூவாயிரம் ரூபாய் என்னிடம் இருக்கட்டும். மாசம் உனக்காக ஐம்பது ரூபாய் அனுப்பி வருகிறேன் பவானி, உனக்கு எப்பொழுது வரவேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது வரலாம். உன்னை இதற்கு மேல் தற்சமயம் வற்புறுத்த நான் ஆசைப்பட வில்லை " என்றான்.

  

நாகராஜன் அங்கே இருந்து உள்ளே சென்றதும். கூடத்தில் உட்கார்ந்து ஊஞ்சலாடும் மனைவியைக் கவனித்தான். கொல்லையில் நடந்த இவ்வளவு பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டு இருந்தவள் எழுந்து வந்து ஏதாவது ஒரு வார்த்தை பேசியிருக்கக் கூடாது? ஒப்புக்காகவாவது பவானியை 'வா' என்று அழைத்திருக்கக் கூடாதா? மனதில் பொங்கும் கோபத்துடன் அவன் மனைவியை விழித்துப் பார்த்து ”கோமு! நீ இங்கேயா இருந்தாய் இந்நேரம்? பக்கத்து வீட்டிற்குப் போயிருப்பதாக அல்லவோ நினைத்தேன்! உனக்கும் நம் வீட்டில் நடக்கும் விஷயங்களுக்கும் சம்பந்தம் இல்லை போல் அல்லவா நீ பேசாமல் இருந்து விட்டாய்?" என்று கேட்டான்.

  

கோமதியின் உதடுகளில் அலட்சியம் நிரம்பிய புன்னகை நெளிந்தோடியது. அவள் ஒரு மாதிரியாகச் சிரித்துவிட்டு.

  

"நீங்கள் தான் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துச் செய்கிறீர்களே. இடையில் நான் வேறு குறுக்கே புகுந்து ஏதாவது பேச வேண்டுமா என்ன?" என்றாள்.

  

நாகராஜனின் கண்கள் கோபத்தால் சிவந்தன! அவன் படபடப்புடன்,

  

"அழகு தான் போ! என்ன தான் நான் பவானியை வருந்தி வருந்தி அழைத்தாலும் நீ கூப்பிடுகிற மாதிரி இருக்குமா கோமு?" என்றான்.

  

கோமதி அதற்குப் பதில் கூறுவதற்கு முன்பு பவானி பாலுவை அணைத்துப் பிடித்துக் கொண்டு கூடத்துக்கு வந்தாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.