(Reading time: 7 - 13 minutes)
Muthu Sippi
Muthu Sippi

  

தாயின் பராமரிப்பிலே வளரவேண்டிய மகவு அந்தப் பாக்கியத்தை இழந்து வாடுகிறது. தாமும் அதை உதறித் தள்ளி விட்டுப் போய்விட்டால்? அந்த நினைவே தம்மைச் சுட்டுப் பொசுக்கிவிடும் என்று தோன்றியது சுவாமிக்கு. மூட்டையைக் கொண்டு போய் பரணில் வைத்தார். குழந்தை ஜெயஸ்ரீயும் ராதாவும் அவர் பராமரிப்பில் வளர்ந்து வருகிறவர்கள் தான். ஏன்? டாக்டர் ஸ்ரீதரனைக் கூட அவர்தான் வளர்த்து வருகிறார்.

  

இன்றைக்குச் சனிக்கிழமை. வென்னீர் போட்டு வைக்கிறேன். டிஸ்பென்சரியிலிருந்து வந்ததும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள்" என்று கண்டிப் பாக உத்தரவு போடுவார் சுவாமி. வீட்டுக்கு அவரைப் பெரியவராக ஆக்கியிருந்தார் டாக்டர்.

  

ஸ்ரீதரனுக்கு ஒரு பெரிய பொறுப்புக் காத்துக் கிடந்தது. இருபது வயதை அடைந்த அவர் தங்கை ராதாவைச் சரியான இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டால், அவர் நெஞ்சிலே இருக்கும் பாதிப் பளு இறங்கிவிடும். ஜெயஸ்ரீயைப் பற்றி இப்போதைக்குக் கவலை இல்லை.

  

டாக்டரின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்த சுவாமி, ”டாக்டர்! யாருடைய வீட்டுக்கோ போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே நேரமாக-வில்லையா?" என்று கேட்டு அவருடைய சிந்தனைகளுக்கு ஒரு முடிவை ஏற்படுத்தினார்.

  

ஸ்ரீதரன் தம் கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு காரில் போய் உட்கார்ந்தார். மாமரத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் ஜெயஸ்ரீ மட்டும் உட்கார்ந்து ஆடி கொண்டிருந்தாள். குழந்தை தனியாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு... ”ஜெயஸ்ரீ! நீயும் என்னோடு வருகிறாயா அம்மா? உன் அத்தை எங்கே?" என்று கேட்டார் காரின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு.

  

ஜெயஸ்ரீ ஊஞ்சலை நிறுத்தினாள். பிறகு பலமாகக் கைகளை ஆட்டி. நான் வரல்லேப்பா. அத்தை கிளப்புக்குப் போயிருக்கா. நான் மாமாகிட்டே கதை கேட்கப் போறேன். தான் வரலை. நீ போகலாம்... டா....... டா........" என்று கையை அசைத்துத் தகப்பனாருக்கு விடை கொடுத்தாள் அந்தப் பெண்!

  

ஸ்ரீதரன் தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டார். குழந்தையின் மனம் எவ்வளவு நுட்பமானது.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.