Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 30 - சரோஜா ராமமூர்த்தி
2.30. காதல் அரும்பியது
குழந்தை பாலுவுக்காகப் பவானி சென்னை வந்தாள். பசுமலையில் ஊரார் அவளைக் கண்ட விதமாகப் பேசி ஏசுவதைப் பொறுக்க முடியாமல் அவன் நற் பெயரெடுத்து, நல்வாழ்வு வாழவேண்டும் என்கிற எண்ணம் அவள் மனத்துள் எழுந்தது. பாலு சென்னை வந்த பிறகு படிப்படியாக அவன் குணத்தில் மாறுதல் ஏற்பட்டது. 'பசுமலையில் இருந்த பாலுவா இவன்!' என்று பெற்ற தாயே வியந்து போற்றும்படியாக அவன் நடந்து கொள்ள ஆரம்பித்தான். முன்னைப் போல அவன் இப்பொழுது சுமதியுடன் காரணமின்றிச் சண்டை பிடிக்க முடியாது. ஏனெனில், அவளும் இவன் வம்புக்கு வருவதில்லை. ஆனால், அவனால் மட்டும் அந்தச் சிறு சம்பவத்தை மறக்க முடியவில்லை . சுமதியின் பேரில் கோபித்துக் கொண்டு ஜெயஸ்ரீயின் புஸ்தகத்தைக் கிழித்தவன் அல்லவா!?
அதன் பிறகு எத்தனையோ முறைகள் அவன் ஜெயஸ்ரீயைப் பல இடங்களில் சந்தித்திருக்கிறான். அவளுடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியும் இருக்கிறான். ஆனால், அந்த சம்பவத்தைப்பற்றி பிரஸ்தாபித்து ..இப்படிச் செய்தது என் தவறு தான்" என்று அவளிடம் கூறிவிட வேண்டும் என்கிற ஆசை அவன் உள்ளத்தில் மேலோங்கி இருந்தது. ஆனால், அதற்குப் போதிய துணிச்சலோ வயதோஏற்படவில்லை. அத்துடன் ஜெயஸ்ரீ ராதாவைப்போல எல்லோருடனும் சகஜமாகப் பழகும் நிலையில் இல்லை. அதாவது எப்பொழுதும் ஒருவித சங்கோஜம் அவளிடம் நிலைத் திருந்தது. சுமதியைத் தேடிக் கொண்டு அவள் அங்கு வரும்போதெல்லாம் பாலு இருப்பதைப் பார்த்திருக்கிறாள். நீண்ட அவள் கருவிழிகள் இரண்டும் சஞ்சலத்தால் சுற்றிச் சுழன்று அவனைச் சரியாகப் பார்க்க விடாமல் அடித்து விடும். ஏதோ ஒரு வெட்கம். கூடவே ஒரு பயம் எல்லாமாகச் சேர்ந்து கொள்ளும். அவள் அந்த இடத்தில் நிற்காமல் விறுவிறு என்று சுமதியைத் தேடிக் கொண்டு போய் விடுவாள்.
'என்ன இப்படி விழுந்தடித்துக் கொண்டு வருகிறாய். கூடத்தில் எதைப் பார்த்துவிட்டு இப்படிப் பயப்படு கிறாயாம்!' என்று உரத்த குரலில் கேட்டுக் கொண்டே சுமதி கூடத்தை எட்டிப் பார்த்து விட்டு. ’ஹே! ஹோ பாலுவைப் பார்த்துவிட்டா இப்படிப் பயப்படுகிறாய்?' என்று அவளைக் கேலி செய்வாள்.
ஜெயஸ்ரீக்கு மேலும் வெட்கமாகப் போய் விடும்.