பெண்ணால் தாள முடியவில்லை. தளதளப்பான உடம்புக்காரியான அவள் தகராறுக் குரலில் கேட்டாள்:
"நாங்க என்ன ஆடா மாடா? நீ பாட்டுக்கு இறங்றே... நீபாட்டுக்கு பார்க்கிற? ஒரு மரியாதிக்குக் கூட இன்னுதுக்காகப் பார்த்தேன்னு சொல்லப்படாதா? இன்னாயா நாயம்? கூலிக்காரிங்கன்னா திருடிங்கனு நெனைப்பா? இந்த அடாவுடிக் காலம் ரொம்ப நாளைக்கு போகாதையா... சாரத்த கழற்றுரது மாதிரி இந்த மட்டுமரியாதி இல்லாத அம்போக்குத்தனனத்த கழற்றுர காலமும் வருமுய்யா."
இளங்கோ... ‘பே' என்று விழித்த போது, ஒரு போலீஸ்காரர்அவனை உள்ளே பிடித்து இழுத்துப் போட்டுவிட்டு, டிரைவரைப் பார்த்து கையை ஆட்டினார்.
ஆட்டோ பறந்தது.
பிரதானச் சாலை, பிரதானச் சாலையில் இரண்டாவது தெரு, இரண்டாவது தெருவின் முதலாவது குறுக்குத் தெரு என்பது போன்ற புரியாத பெயர் கொண்ட சாலைகள் வழியாய் ஓடி ஓடி, இறுதியில், சந்தடி மிக்க ஒரு தெருவில் போய் நின்றது, அந்தக் காவலர்கள் இளங்கோவுடன் சேர்ந்து இறங்கினார்கள். பக்கத்தில் ஒரு தேநீர் கடை... அதன் வாசலில் போய் நின்று கொண்டு அங்கே இருந்தவர்களை ஒரே பார்வையாய்ப் பார்த்து மிரட்டுவது போல் கேட்டார்கள் :
“இந்தப் பக்கமா எவளாவது ஒருத்தி கோணி மூட்டையோட போனாளா? சொல்லுங்கப்பா... துரமாரே."
எல்லோரும் முகங்களை கேளாக் காதுகளோடு, திரும்பிக் கொண்டபோது, ஒரே ஒரு ஒல்லி மனிதர், 'ஒடக்கு'ப் போன்ற ஜிப்பாக்காரர் எதிர்க் கேள்வி போட்டார்:
“கையில் இரும்புத்தடி வச்சிருந்தவளா? கழுத்துல மச்சமா? முதுகில கோணி மூட்டையா?”
"ஆமா ஆமா...”