அவளை எப்போ எப்படி மடக்கணும்னு எங்களுக்குத் தெரியும். ஒரு பொம்மனாட்டிய மடக்கத் தெரியல... பெரிசா பேசற பாரு. எதுக்கும் சாயங்காலமா ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைன்ட் கொடு. நீங்க கற்பழிக்கப் போனதா அவள், எதிர் புகார்கூட கொடுப்பாள். நீங்க அதுக்கும் தயாராய் இருக்கணும். ஓகே.. ஈவினிங் வாங்க. ஆட்டோ சார்ஜ்க்கு டிரைவர் கிட்ட காசு கொடுத்திடறீங்களா?"
ஆட்டோ டிரைவர் இளங்கோவை 'பொருள்'படப் பார்த்தான். இளங்கோவும், இவனுக்கு நான் எதுக்குக் காசு கொடுக்கணும் என்று சொல்லப் போனான். பிறகு 'கற்பழிப்பு, பலாத்காரம்' போன்ற பயங்கரவாத வார்த்தைகளை வீசிப்போட்ட காவலர்கள் உருட்டிய கண்களையும் பார்த்தான். ஓசைப்படாமல் பேண்ட் பைக்குள் துழாவி மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை வலதுகையின் முகப்பிற்ழக்கு கொண்டு வந்து, டிரைவரிடம் நீட்டப் போனபோது, ஒரு காவலர் அதைப் பறித்துக் கொண்டார். உடனடியாக அந்த ஆட்டோ, இளங்கோ இல்லாமலே இரும்புக் கடைக்கு எதிர்த் திசையில், அந்தக் கடைக்குப் பயந்து ஓடுவது போல் ஓடியது.
தேநீர் கடைக்குள் இருந்த அந்த ஒல்லி ஜிப்பாக்காரர் இப்போது உரக்கப் பேசினார்:
"சூரப்புலிங்க மாதிரி நம்மள மிரட்டுற மாதிரி அதட்டினாங்க. ஆனால், அந்தப் பொண்ணு அதோ அந்த 'இரும்பு' கடைக்குள்ளே போயிட்டான்னு தெரிஞ்சதும் சப்புன்னு அடங்கிட்டாங்க. ஏழைங்க கிட்ட நாகப்பாம்பா சீறுறது; இருக்கப்பட்டவங்கக் கிட்ட பெட்டிப் பாம்பா அடங்கறது. இதுதான் போலீஸ்ன்னு ஆகிப்போச்சு."
வேறு மாதிரியான சந்தர்ப்பங்களில் அந்தப் பேச்சை ரசித்துக் கேட்கும் இளங்கோ, இப்போது தலை குனிந்தபடியே வீட்டுப் பக்கமாக நடந்தான். அவள் வேறு வழியாய் போயிருப்பாள் என்று நெஞ்சுக்குப் பொய் சாட்சி சொல்லிவிட்டு வீட்டைப் பார்த்து நடந்தான். வீட்டுக்கும் போய் விட்டான்.
கிராமத்தில் நாட்டாண்மை குடும்பத்தில் பிறந்த அம்மாவின் ஆதிக்க ரத்தம் இப்போது அழுத்தமாகி, அவனுக்கு திட்டு வாங்கிக் கொடுத்தது.
"ஏண்டா, ஒரு சின்னப் பொண்ணுகிட்ட அடிவாங்கிகிட்டு வந்து நிக்கிறியே... இந்த ஒடம்ப