விட்டபடியே கண்ணாடியில் சண்டைக் காட்சிகளைப் பார்த்தார். இன்னும் உச்சக்கட்டம் வரவில்லை என்றும், அப்படி வந்தால்தான் நிழல் முகங்களை விட்டுவிட்டு, நிஜ முகங்களைப் பார்க்க வேண்டும் என்ற நிதானம். ஆனாலும், இடது பக்க வரிசையில் உட்கார்ந்திருந்த அதே நடுத்தர வயது மனிதரால் பொறுக்க முடியவில்லை. மனைவி பிடித்திழுத்த கையை இன்னொரு கையால் விலக்கிவிட்டு, அடிதடி இடத்திற்குப் பாய்ந்தார். அடித்தவனுக்கும் அடிபட்டவனுக்கும் இடையில் நின்று கொண்டே அதட்டினார்.
"ஏய்யா இப்படி மிருகமாகுறே... என்னன்னு விசாரிக்காமல் இப்படியா எடுத்த உடனே அடிக்கது"
"ஒங்க பெண்டாட்டி பக்கத்திலே இப்படி ஒருத்தன் ஒட்கார்ந்தா, நீங்க பொறுப்பீங்களா?"
"ஏங்க இங்க வாங்க... அந்த ஆளு அறிவில்லாமப் பேசறான். நீங்களுமா அறிவில்லாம நிக்கது?"
"இந்தாம்மா... அவன் இவன்னு பேசாதீங்க... இவன் ஒங்களை இப்படிப் பண்ணியிருந்தா..."
"பண்ணியுமாச்சு... குதிரையுமாச்சு... மொதல்ல அந்தப் பொண்ணை விசாரி... அவளே திட்டம் போட்டு சோடி சேரச் சொல்லியிருக்கலாம். இப்போ ஒன்னைப் பார்த்து பயத்துல அந்த அப்பாவியக் காட்டிக் கொடுக்கலாம். ஊரு ஒலகத்துல பார்க்கத்தானே செய்யுறோம்?"
இப்போது, அடித்தவன் உட்பட அத்தனை பேரும், அந்த இளஞ்சிட்டை சந்தேகமாய்ப் பார்த்தார்கள். அவளோ, முகத்தைக் கைகளால் மறைத்துக் கொண்டே விம்மி விம்மி வெடிவெடியாய் அழுதாள். அவள் "உண்மை" சொல்லப் போகிறாள் என்று, எல்லோரும் அந்தரங்க விருப்பத்தோடு பார்த்த போது, அவளோ, "சத்தியமாய் எனக்கு எதுவும் தெரியாது. இவன் யாரோ? நான் யாரோ?" என்று மாறி மாறியும், மாற்றி மாற்றியும் சொல்லி ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு விதமாய் அழுதாள்.
அவனுக்கு - அதுதான் அவளருகே உட்கார்ந்து அடிவாங்கிய சுயம்புக்கு அழுகை தாங்க முடியவில்லை. நிலைமை அவனுக்கு புரிவது போலிருந்தது. அடித்தவனை ஏறிட்டு நோக்கி விட்டு, அதே கண்களை அத்தனை பேர் மீதும் படரவிட்டு, அலங்கோலமாய் விக்கி விக்கிச் சொன்னான். ரத்தக்கசிவு வாயோடு, திக்கித் திக்கிச் சொன்னான்.