(Reading time: 32 - 63 minutes)
Vata malli
Vata malli

மேல் தட்டிலிருந்த இன்னொரு சாவியை எடுத்து, லாக்கரைத் திறந்தான். மூன்று அட்டைப்பெட்டிகள். அக்காவுக்காக வாங்கிய நகை நட்டுக்கள். தங்க இழையின் ஆட்டியன் வடிவத்தில் கோர்க்கப்பட்ட மார்பளவுக்கான காசு மாலை. இன்னொரு பெட்டியில் ஒரு நெக்லஸ். மற்றொரு பெட்டியில் வெல்வெட் வளையங்களில் வைக்கப்பட்ட நான்கு தங்க வளையல்கள். பீரோவைப் பூட்டாமலே சாத்திவிட்டு அதன் ஒரு பக்கம் உள்ள செவ்வகக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். ஆனந்தம். அட மறந்துட்டேனே. மீண்டும் பீரோவைத் திறந்து அதன் மேல்தட்டிலேயே கிடந்த கொலுசுகளை எடுத்து, காலில் மாட்டிக் கொண்டான். கண்ணாடியில், பிரமிப்பாய் பார்த்தான். பீரோவுக்கு மேலிருந்த பவுடரைப் பூசிக்கொண்டான். டப்பியிலிருந்த குங்குமத்தை எடுத்து டேவிட், டேவிட்' என்று சொல்லிக்கொண்டே நெற்றியில் திலகமிட்டான்.

  

கால் கொலுசுகள் ஜல்ஜல் என்று சத்தத்தை எழுப்ப, அங்குமிங்குமாய் நடந்து பார்த்தான். அதற்கு ஏற்ப, லேசாய் ஆடினான். ஒவ்வொரு காலையும் தூக்கித் தூக்கி, ஆட்டி ஆட்டி, நாதம் எழுப்பினான். கைகளைப் புரட்டிப் புரட்டி பொன்னொலி எழுப்பினான். மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டான். பாழாய்ப் போகிற இந்தப் புடவைதான்... பரவாயில்லை. நாளைக்கு மலருகிட்டயே கேட்டுக்கலாம். பதில் கடிதம் வாங்க வருவாளே.

  

சுயம்பு, பெண்மையைச் சிறையிட்ட ஆணுடம்பை தண்டிப்பதுபோல், குதியாய்க் குதித்தான். பிறகு அதுவே ஆனந்தக் கூத்தானது. மேஜையில் தயாராயிருந்த காகிதத்தையும், அதன் மேல் வைக்கப்பட்ட பால்பாயிண்ட் பேனாவையும் குறி பார்த்தபடியே நாற்காலியில் உட்கார்ந்தான். எழுதி, எழுதி, எழுதியவற்றைக் கிழித்துப் போட்டான். ஏதோ ஒரு நெருடல்... என்னது... ஆமாம். பாசமும் நேசமும் காட்டிய அந்த ஆம்புளைப் பயல்கள் மூர்த்திக்கும், முத்துவுக்கும் ஒரு லெட்டர் போட்டேனா, அன்பு செலுத்துகிறவர்களை விட்டுவிட்டு, அன்பு செலுத்தப்படுகிறவருக்கு எழுதுவது சுயநலம் இல்லியா... அந்தப் பயல்களின் ‘உடன்பிறப்பு’ பாசத்தை மறக்க முடியுமா...

  

சுயம்பு டேவிட்டுக்கு, எழுதப்போன காகிதத்தை, மூர்த்திக்கும் முத்துவுக்கும் சேர்த்து எழுதினான். பிறகு, டேவிட்டுக்கு இன்னொரு நோட்டுப் புத்தகத்தில் ஒரு நல்ல காகிதத்தைக் கிழித்தான். தங்கையின் டிராயிங் நோட்டுப் புத்தகம். அதுக்குள் ஏதோ ஒரு ஆண் படம் வரையப் பட்ட தாளை விட்டுவிட்டு, அடுத்த தாளைத்தான் எடுத்தான். எழுதத் துவங்கினான். வார்த்தைகள் தாமாக வந்தன. மலரின் வார்த்தைகளையும் கொஞ்சம் திருடிக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.