Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 16 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 16
சந்தடி சாக்கில், வீட்டுக்கு ஓடி வந்த சுயம்பு, அந்தப் பேருக்கு ஏற்ப தன்னைத்தானே புதிய வடிவத்தில் படைத்துக் கொண்டிருந்தான்.
தலையை பாப் செய்து அசல் பெண் போலவே தோன்றினான். அந்த பாப் தலையிலும் ஒரு சிவப்பு வளையம். பிடரியில் ரிப்பன் கட்டுக்கள். பிராவோடு கூடிய ஜாக்கெட். அதைப் பாதி மறைத்த முந்தானை... பாவாடை நாடா தெரிந்த சேலைக்கட்டு... ரத்தச் சிவப்பான குங்குமம்... வெளியே அதிர்ந்து போய் நின்ற அப்பாவையோ, அண்ணனையோ கவனிக்காமல், கை வலையல்களைக் கலகலப்பாக்கிக் கண்ணாடியில் இரண்டு பக்க இடுப்புக்களையும் பார்த்து, அங்குமிங்குமாய், அந்த அறைக்குள் உலவிக் கொண்டிருந்தான்.
ஆறுமுகப்பாண்டி அப்பாவையே பார்த்தபோது, அவர், ‘தம்’ பிடித்து நடந்தார். மூச்சை மூக்கில் மட்டும் வைத்திருப்பவர் போல் முகத்தை நிமிர்த்திக் கொண்டே நடந்தார். முதுகைக் காட்டிய சுயம்புவைத் தன் பக்கமாய்த் திருப்பி, தன் முகத்துக்கு எதிராய் வைத்துக் கொண்டு, நிதானமாகக் கேட்டார். புயலுக்கு முன் வரும் ஒரு அமைதி... பதுங்கிக் கேட்டார்.
“ஏய் சுயம்பு. சேலைய அவுறுடா! ஜாக்கெட்ட கழட்டுடா!”
“மாட்டேன்!”
“ஏன் மாட்டே?”
“ஏன்னா. நான் பொம்புள! கேர்ல்!”
“இப்போ அவுக்கப் போறியா இல்லியா?”
“மாட்டேன்! நீங்க செய்த தப்புக்கு நான் எதுக்கு தண்டனை அனுபவிக்கணும்?"
“என்ன தப்புடா செய்தேன்?”