இதற்குள், பேட்டை அலிகளுக்கிடையே ஒரு சின்னச் சண்டை. சேலை கட்டாமல் லுங்கி கட்டியவர்களை ஜமாவிலிருந்து தள்ளிவைக்க வேண்டுமென்று ஒரு புடவை சொல்ல, லுங்கிகளுக்கும் புடவைகளுக்கும் போர் துவங்கியது. ஒரு பக்கத்து லுங்கிகள், இடதுகையை நீட்டி, வலது கையை அதற்குமேல் பிடித்து, மேல் கையை அங்குமிங்குமாய் உருட்டி, இரு உள்ளங் கைகளையும் ஒன்றோடு ஒன்று தட்டி, போர்ச் சத்தம் எழுப்பினார்கள். இது மாதிரிதான் எதிரணியும்... “புடவை வாங்கிக் கொடுங்கடி கட்டிக்கிறோம்..” “அடியே என் சக்களத்திகளா லுங்கிய கிழிச்சு புடவை மாதிரி கட்டுங்களேன்டி... அடுத்தவாட்டி இப்படி ஜமாவுக்கு முண்டமா வந்தீங்க, நடக்கிற கதையே வேற...”
இருதரப்பும், போர் வார்த்தைகளை விட்டன. ஒருதரப்பு பேசும்போது, மறுதரப்பு இடையில் குறுக்கிடாது. அது பேசி முடித்ததும், மேல் கையையும் கீழ் கையையும் தட்டி திட்டுக்களை வெளிப்படுத்தும்... இருபக்கமும் சேராதவர்கள் “தத்தேறி முண்டைங்களா! நீங்க போடற சத்தத்துல முர்கேவாலி மாதாவே ஓடிடப் போறாள். ஒக்காருங்கடி. ஒங்க புத்திக்குத்தான் நம்மள பொட்டை பொட்டைன்னு பொறுக்கிப் பயல்க சத்தாய்க்கிறாங்க. அதைக் கேக்க வக்கு இல்ல... வந்துட்டாளுக சக்களத்திங்க...”
இதற்குள், குருவக்கா, ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு அலியைக் கூட்டி வந்தாள். பின்னால் பவ்வியமாய் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே, அவளை லேசாய்க் கையைப் பிடித்து முன்னோக்கி நடந்தாள். வழி அடைத்தவள்களில், அவளுடைய ‘சேலாக்களை’ மட்டும் காலால் இடறிப் ‘பெரியவங்களுக்கு வழி விடுங்கடா, விடுங்கடி’ என்று மாறி மாறி ‘டா’வும், ‘டி’யும் போட்டு போட்டு குரு அலியைக் கூட்டிப்போனாள். உடனே பத்தாவது வகுப்பு பாத்திமா உட்கார்ந்தபடியே இருவர் கால்களையும் கையால் தொட்டு, அதற்காக வளைத்த உடம்பை நிமிர்த்தினாள். குருவக்கா, அவள் தாய் மதனாவிடம் கத்தினாள். “நல்லா இருக்குடிம்மா ஒன் பொண்ணு செய்யுற காரியம். எழுந்து கும்பிட்டால் என்னவாம்...”
இதற்குள், குரு அலி, முர்கேவாலி மாதா முன் உட்கார்ந்தார். எல்லோரும் கல்லடுப்பில் வைக்கப்பட்ட பச்சை வண்ணம் தீட்டப்பட்ட பால் செம்பையே பார்த்தார்கள். பால் பொங்கியபிறகே, பூஜை...
முன்னால், ஒரேயடியாப் போகாமலும், அதே சமயம் பின் தங்காமலும் மத்தியில் சுயம்புவோடு