Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 24 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 24
அந்த அலி ஊர்வலம், சிரிப்பும் கும்மாளமுமாய் புறப்பட்டது. வளையல்கள் குலுங்கின. கொலுசுகள் கும்மாளமிட்டன. சிலர் சினிமாப் பாட்டுப் பாடினார்கள். சிலர் அதற்கு ஏற்றாற்போல் அங்குமிங்குமாய் ஆடினார்கள். அதேசமயம், வழக்கமான ஊர்வலத்தைப் போல் அக்கம் பக்கத்தை அலட்சியமாகப் பார்க்காமல், அடக்க ஒடுக்கமாகப் போனார்கள். பிரதான சாலை வழியாய், மயிலாக ஆடி, குயிலாகப் பாடி, ஒயிலாக நடந்து, அண்ணா சதுக்கம் வந்து, அதற்கு அப்பால் எழிலகத்திற்கு எதிரே ஒரு இறங்கு முனைக்குப் போனபோது, சரிவுப் புல்தரையில் உட்கார்ந்திருந்த நான்கு பேர் நேரடி வர்ணனை கொடுத்து, விசிலடித்தார்கள்.
“ஏய் பொட்டைங்களா... ரேட்டைக் கூட்டிட்டிங்களாமே. பொட்டைங்களா... ஏய் பொட்டை, ஒன்னத் தான். கொஞ்சம் போஸ் கொடுமே...”
“இதுகளுக்கு இன்னிக்கு இன்னடா வந்திட்டு...”
“ஏதாவது ஒரு பொட்டை வயசுக்கு வந்திருக்கும்... இதோ அந்த பொட்டைக்கிட்டய கேக்கலாமே... ஏய் பொட்டை... பொட்டைப் பையா... உங்களுக்கு வயசுக்கு வாறதுன்னா என்னாடி... சொல்லு கண்ணு... கபீரிச்சி மாதிரி போறியே...”
பெரும்பாலான, அலிகள் கண்டுக்கவில்லை. இந்த மாதிரியான வார்த்தைகளை இந்தக் கடற்கரை பொறுக்கிகளிடம் மட்டுமல்லாமல், பங்களா பொறுக்கிகளிடமும் கேட்டுக் கேட்டு மரத்துப் போன மனங்கள். ஆனால் சுயம்பு திரும்பித் திரும்பிப் பார்த்தான். ஒரு சில இடங்களில் வீறாப்பாய் நின்று முறைத்தான். அவனிடமே, ஒருத்தன் வயசுக்கு வாறது பற்றிக் கேட்டதை, பச்சையம்மாவால் பொறுக்க முடியவில்லை. மகளின் பார்வையில் ஒரு வீரத் தாயாக விளங்க நினைத்தாள். மேற்கொண்டு நடக்காமல், திருப்பிக் கொடுத்தாள்.
“ஏண்டா எச்சிக்கலைங்களா... பொறுக்கிப் பசங்களா... ஒங்க வீட்லயும் ஒரு பொட்டை விழ... எதுக்குடா எங்கள் வம்புக்கு இழுக்குறீங்க!”
“இது கோபப்பட்டாக்கூட அயகாத்தாண்டா கீது...”