எத்தனை செலவு இருக்குது. என் தம்பிப்பய ஒரு பைசாகூட கொடுக்காமப் போயிட்டானே! அவன் வீட்லயும் பொட்ட விழ... அய்யய்யோ முர்கேமாதா வாய் தவறி சொல்லிட்டேண்டி... அதைப் பெரிசா எடுத்துக்காதடி. என் தம்பிமேல கோபப்படாதடி... எங்க வம்சத்துக்கு நான் ஒருத்தி போதும்டி..”
“சரி, சீக்கிரமா போயிட்டு சீக்கிரமா வா. இவள எதுக்குடி இழுக்குறே...”
“இப்பவே தொழில் செய்யாட்டியும், தெரிஞ்சு வச்சுக்கட்டுமே...”
“எனக்கு என்னமோ சரியாப்படலை... அப்புறம் ஒன் இஷ்டம்!”
“கவலைப்படாத குருவக்கா. என் மகளுக்கு இஷ்டமில்லாமல் எதையும் செய்யமாட்டேன். அவள்மேல ஒரு துரும்பு விழக்கூட பொறுக்கமாட்டேன்... வாடி என் ராசாத்தி...”
சுயம்புவுக்கு, ஒன்றும் பிடிபடவில்லை. ஆனாலும், அந்த சேரிப்பகுதிக்குப் போகவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரே நாற்றம். சுடுகாட்டு வாசனை. கருவாட்டுக் குமட்டல். கண்ணால் பார்க்க முடியாத அசிங்கம். இந்தக் கடற்கரை எவ்வளவு அகலமா இருக்கு.
பச்சையம்மா குருவக்காவிடம், மகள்மேல் இருந்த தனது ஆதிபத்திய உரிமையை நிரூபிக்கும் வகையில், சுயம்புவை இஷ்டமில்லாமல்தான் இழுத்துக்கொண்டு போனாள். விட்டுவிட்டுப் போனால் குருவக்கா மகளின் மனதை கலைத்துவிடுவாள் என்ற பயம். முறைப்படி தத்துப் பூஜை நடைபெறும்வரை இவள் சட்டப்படியான தாயல்ல. முர்கே மாதாவின் படத்துக்கு முன்னாலோ, அல்லது பல்லவன் போக்குவரத்து தலைமையகத்திற்கு அருகே உள்ள கோட்டக்கல் முனிஸ்வரன் கோவிலில் சுவிகாரச் சடங்குகள் நடத்தி, ஊசி போட்டுப் பெரிதான தனது மார்பகத்தைத் திறந்து, அதன் மேல் பூஜை செய்த ஒரு கிண்ணத்துப் பாலை ஊற்றி இந்த சுயம்பு அந்தப் பாலை அண்ணாந்து குடிக்கும்வரை அவள் முறைப்படி தாயுமல்ல சுயம்பு மகளுமல்ல...
சுயம்பு, பசுமாட்டின் பின்னால் நின்று நின்று, போகும் கன்றுக்குட்டிபோல் நின்று நின்று நடந்தான். பச்சையம்மாவும் அதேபோல் நின்று நின்று, அவன் தன் பக்கம் வந்தபிறகே நடந்தாள். இதற்குள் அந்த ஆசாமியும் போக்குக் காட்டியே நடந்தான். பச்சையம்மா சுயம்புவை