“ஒங்க ஆத்தாளுங்களப் போய்க் கேளுங்கடா... ஏண்டா எங்கள சித்ரவதை செய்யுறீங்க?”
“அப்படின்னா என்னம்மா கண்ணு... சித்திரத்துல படம் போடுறதா... செந்தமிழ் தேன் மொழியாள்... அவள்... திட்டும் மலர்கொடியாள்.”
இதற்குள் குருவக்கா, அங்கே ஒடி வந்தாள். அந்த அலி வரிசையும் காச்சு மூச்சு சத்தத்தோடு அவர்களை வட்டமாய் சூழப்போனது. ஆனால் குருவக்கா விடவில்லை. இன்றைக்கு அடித்துவிடலாம்... நாளைக்கு அவஸ்தைப்படுவது... அவள் பச்சையம்மாவை உலுக்கிய போது, பச்சையம்மா உஷ்ணமாகக் கேட்டாள்.
“போலீஸ் நாயிங்கதான் பொய் கேசு ஜோடிச்சு எங்கள அலக்கழிக்குது... நீங்களும் ஏண்டா பிராணனை வாங்குறீங்க...”
குருவக்கா, பச்சையம்மாவை இழுக்க, பச்சையம்மா சுயம்புவை இழுக்க, அவன், அந்தப் புல்லர்களைப் பார்க்க, அவர்கள் வரிசையோடு சேர்ந்தார்கள். குருவக்கா பச்சையம்மாவிடம் காதில் பேசினாள். அதற்குள் அவள் புலம்பிக்கொண்டே நடந்தாள்.
“ஒரு நாளா ரெண்டு நாளா... பொழுது விடிஞ்சா பொட்டை... பொழுது போனால், பொட்டை... சம்பாதிக்கிற பணத்தைக் கத்தியக் காட்டிப் பிடுங்குறாங்க. இந்தப் பொறுக்கிங்களைப் பத்தி போலீஸ்கிட்ட சொன்னா, அந்தப் பொறுக்கிங்களும் நம்மளத்தான் புரட்டி எடுக்காங்க... பேஜாரான பொழப்பு... நீ ஏன், கண் கலங்குறேடி! நான் இருக்கேன்... குருவக்கா இருக்காள்.”
“ஏய் பச்சம்மா... ஒனக்கு மூளை இருக்குதா... அவன் யார் தெரியுமா? பிளேடு ராக்கப்பன். பஸ்ல பப்ளிக்காவே கண்டக்டருக்குத் தெரியும்படியாவே அறுக்கிறவன். போலீஸுக்குக் கையாளு. அவன் கிட்ட போயாடி வாயாடுறது.”
“அடக்கடவுளே... எனக்குத் தெரியாமப் போச்சே! நாளைக்கு அவன் குப்பத்துக்குப் போயே மன்னிப்புக் கேட்டுக்கப்போறேன்... பயப்படாதே மகளே, நட! நாங்க இருக்கோம்!”