Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 31 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 31
தொட்டிலில் கிடந்த குழந்தையை சோக மயமாய்ப் பார்த்துக் கொண்டு கையைப் பிசைந்த சுலோச்சனா, சுயம்புவைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். பிறகு அவளிடம் “ஆப் ஹமாரா கர்மே” என்று அதற்குமேல் இந்தியில் பேசத் தெரியாமல் விழித்தாள். பகுச்சார்தேவி இந்தியிலும் குஜராத்தியிலும் ஏதோ, அந்த மதராசிப் பெண்ணுக்குத் தெரியும் என்பதுபோல் பேசினாள். இறுதியில் சுயம்பு சொந்த மொழியில் பேசும் உணர்வு இல்லாமலே பேசினான்.
“குழந்தைக்கு என்னக்கா செய்யுது?”
சுலோச்சனா அவனை அதிர்ந்து பார்த்தபோது, அவன் மேற்கொண்டும் தொடர்ந்தான்.
“அன்றைக்கு ஒங்ககிட்ட வேணுமுன்னுதான் தமிழில பேசலே! ஏன்னு கேட்காதீங்க. நானும் ஒரு நல்ல குடும்பம்தான். இப்படியாயிட்டேன். என்னடா பண்ணுது மருமகனே... அத்தைகிட்டே. நீயாவது சொல்லுடா.”
அவள் கண்ணிர் சிந்தி கதை சொல்லும் குரலில் சொன்னாள்.
“ஒரு மாசமா திடுதிப்புன்னு வெட்டு வருது... பிட்ஸ்ஸாம். கட்டுப்படுத்த முடியாதாம். மருந்து மாத்திரை கொடுத்து எட்டு வயசு வரைக்கும் எச்சரிக்கையாய்ப் பார்த்துக்கணுமாம். இல்லாவிட்டால், எது வேணுமுன்னாலும் நடக்குமாம். இவரு வேற இன்னிக்கு ராத்திரிதான் வருவார். பத்துநாள் டூர்...”
சுயம்பு மூச்சே ஒரு வெட்டாவதுபோல், முடங்கிக் கிடந்த குழந்தையைப் பார்த்துவிட்டு, அவளுக்கு உபதேசித்தான்.
“டாக்டருங்க கெடக்கானுக. எங்க அண்ணன் பயலுக்கும் இப்படித்தான் அடிக்கடி வெட்டு வந்திச்சு. ஒரு நாட்டு வைத்தியரு கஸ்தூரி மாத்திரையை தேனுல ஒரு வாரம் கொடுத்தார். வெட்டு, வெத்து வேட்டாயிட்டு. பேசாமல், அதை வாங்கிக் கொடுங்கக்கா.”