சுகதுக்கம் சமமாகும் போள் ஏக்கமேது; நம்பிக்கையோடு முயற்சி செய். பலனைப் பற்றிக் கவலைப்படாதே. அதுதானல்லோ கீதாசாரியன் சொன்னதுங்கூட?"
"அம்மாவா! பதவியிலமர்ந்தால் அப்படிச் சமமாகப் பார்க்க முடியாதென்று தான் நீங்கள் கரையோரமாக ஒதுங்கி விட்டீர்களா?"
மூக்குக் கண்ணாடிக்குள்ளிருக்கும் விழிகள் அவளைப் பார்த்துச் சிரிக்கின்றன.
"பதவியில் அமருமுன் நம்முடைய தலைவர்களின் பேச்சுகளும் நடப்பும், பிறகு கொள்கைகளைக் கையாள ஆட்சி கைக்கொண்டு பிறகு மாறிப் போவதால் தான் இளந் தலமுறை நம்பிக்கையில்லாமல் போனது. தனிமனிதனின் ஒரு தூய்மையான நடப்பினாலேயே நாணயம், ஒழுங்கு எல்லாம் இருந்தாலே சமுதாயமும், ஜனநாயக அரசாட்சியும் மேன்மையாகும்..."
"இதற்கு நம்மால் இப்ப என்ன செய்ய முடியும் அம்மாவா?"
"உம்...?...யமு, இந்த நூற்றாண்டு ஆகோஷமெல்லாம் எதற்கு? நமக்கு விளம்பரமா? அல்ல. ஒரு பத்து நூறு குட்டிகள் இளந்தலமுறை கண்டு கேட்டு மனசில் வாழ்க்கையின் நல்ல நல்ல நெறிகளெல்லாம் பதியணும். இந்த நூற்றாண்டுத் திட்டமாக, வெறும் பாதயாத்திரையோடு நிற்காமல், மூலை முடுக்கெல்லாம், முக்கியமாக மனுஷ மதிப்புகளுக்கு இடம் கொடுக்காத நகரத்தில் நெறியோடு கூடிய வாழ்க்கைக்குப் பிரசாரம் செய்ய வேணும். இது என்னோட யோசனை..."
யமுனா மௌனமாக நிற்கிறாள்.
"அம்மையிடமும் அச்சனிடமுங்கூட இதே சொன்னது. ஏற்கெனவே முதிர்ந்து வழிமாறிப் போனவர்களைத் திருத்துவதை விட, இனி வளரும் தலைமுறைக்கு நல்ல வழிகாட்டுவது அவசியம் அல்ல? மூலைக்கு மூலை எலிமெண்டரி ஸ்கூல் மிடில் ஸ்கூல் ஹைஸ்கூல் எங்கும் பிரசாரம் செய்யணும். ஒரு நல்ல சமுதாயத்துக்கு வித்திடணும். யமுனா உரச்சு நிற்கணும் எந்தா?"