"நான் இந்த வேலையைக் கூலிக்குச் செய்வதாக நினைத்தாள் ஒருத்தி..."
யமுனா கலகலவென்று சிரிக்கிறாள்.
அவரோ அவளைப் பெற்று வளர்த்த தந்தை தன் மகள் கணவன் வீடு செல்ல விடைபெற நிற்பது போல் உணர்ச்சி தழுதழுக்க நோக்குகிறார்.
"யமுனா, எனக்கு உன்னைப் பார்க்கப் பெருமையாயிருக்கு; ஒரு கலாகாரன், தன் சிருஷ்டியைப் பார்த்துச் சந்தோஷப்படுவது போல், நிண்டம்மையும் அச்சனும் காட்டுக் குழந்தைகளை மக்களாய் சுவீகரிச்சு உன்னை நான் சுவீகரிச்சு, மகளே வில்வித்தையும் குதிரையேற்றமும் கற்பிச்சு மகனை யுத்தரங்கத்துக்கு அனுப்புவது போல் எனக்குள்ளே ஒரு எண்ணம். என் கண்முன் வளர்ந்த நீ எப்படி இருக்க வேணும்னு நினைச்சேனோ, அதெல்லாம் கை கூடினாப் போல் சந்தோஷம். ஆனால் எத்ர கட்டிக் கொடுத்தாலும், சொல்லிக் கொடுத்தாலும், சமர பூமியைக் கண்டதும் நடுநடுங்கிப் போகிறவர்கள் தான் இந்த அஹிம்சா வழியில் அதிகமான பேர்களும், பதவியையும் பொறுப்பையும் வகிக்க வருபவர்கள் தான் எல்லாரும். அந்தக் களத்தில் மின்மினிப் பூச்சிகளாக ஆண்மையிழந்து சுற்றிக் கொண்டிருப்பவர்களையே இன்றைக்கு நாடு முழுசும் பார்க்கிறோம். நீ ஏது பதவி வகிச்சாலும் எரிமுட்டை தட்டி ஜீவனம் செய்தாலும் பத்து நூறு குட்டிகளுக்குப் படிப்பிச்சாலும், ஒரு முரட்டுப் புருஷனுக்கு மணவாட்டியானாலும் சத்தியத்தையும் அஹிம்சையையும் முழு வடிவத்தில் அந்த வாழ்விலே, அந்தத் தொழிலிலே காணவேணும். அப்போள் லோகத்துள்ள சக்தியெல்லாம் நிண்டே பங்கில் வரும். சத்தியமே ஜயம்னு ஏட்டில் வரஞ்சு வச்சாப்போல அது வராது குஞ்ஞே. அதை வாழ்விலே வரைந்து கொள்ள வேணும். நான் உனக்கு என்றென்றைக்கும் எப்போதும் சொல்லும் ஒரே அறிவுரை இதுதான். ஊருக்கு இதைச் சொல்லத்தான் உன்னை ஆசையோடு உருவாக்கினேன்..."
சரளமாக மெதுவாக இழிந்து கொண்டிருந்த அருவி பெரிய பெரிய பாறைகளையும் மண்ணையும் காட்டிக் கொண்டு வறண்டு விட்டாற்போல் அவளுக்குத் தோன்றுகிறது. தண்ணீர் வழியும் போது தோன்றாத அச்சம், தண்ணீரில்லாத போது தோன்றுகிறது.